சொன்னதை செய்த சிம்பு...! மறைந்த நடிகர் விவேக்கிற்கு... "மாநாடு" படக்குழு செலுத்திய இதயபூர்வமான அஞ்சலி!
நடிகர் விவேக் மறைவை தொடர்ந்து, மிகவும் உருக்கமாக தன்னுடைய அறிக்கை வெளியிட்டு தன்னுடைய அஞ்சலியை செலுத்திய நிலையில்... 'மாநாடு' படக்குழுவினருடன், மரங்களை நட்டு தன்னுடைய இதயபூர்வமான அஞ்சலியை செலுத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
வயது வித்தியாசம் இன்றி, அனைத்து வயதினரையும் சிரிக்க வைத்தவர் விவேக். இவர் உடல்நல பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டபோது கூட, விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என இவரது ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் ஒட்டு மொத்த திரையுலகினரையும் கலங்க வைக்கும் விதத்தில் விவேக் இறந்து விட்டார் என்கிற அதிர்ச்சி செய்தி வெளியானது.
இதைத்தொடர்ந்து, பல பிரபலங்கள் அறிக்கை விட்டு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில், நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்திருந்தார்.
"அன்பு அண்ணன், நம் சின்ன கலைவாணர், இன் முகம் மாறாத மனிதர், எல்லோரிடமும் இயல்பாக பழகுபவர், கணக்கற்ற மரக்கன்றுகளை நட்டு காற்றுக்கு ஆக்சிஜனை சுவாசிக்க கொடுத்தவர், இன்று மூச்சற்று விட்டார் என்ற பெரும் துயரச் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்.
சைக்கிளிங், உடற்பயிற்சி, யோகா, இசை என மிக ஆரோக்கியமான முன்னுதாரணமாக நான் ஆச்சரியப்படும் மனிதர் நடிகர் விவேக் சார்.
பண்பாளர், இவ்வளவு சீக்கிரம் இசப்போமென்று கனவிலும் நினைத்ததில்லை. தமிழ் சினிமாவில் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பகுத்தறிவு கருத்துக்களை போதித்து வந்தார். மரக்கன்றுகளை நடுங்கள் என ஐயா அப்துல் கலாம் காட்டிய வழியை இளைஞர் மத்தியில் விரைவாக கொண்டு சென்று செயல்படுத்திய செயல்வீரர்.
அவர் மறைந்தாலும், அவர் செய்து சென்றிருக்கிறார் செயல்கள் அவரை என்றும் நகைச்சுவை நடிகராக, கருத்தாழம் மிக்க மனிதராக நிலைத்திருக்க வைக்கும். நம்மிடையே நிலைத்திருப்பார்.
என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். எப்போதும் என் நல்லது, எடுக்கும் முயற்சிகள் பற்றி விமர்சித்து கொண்டிருப்பார்.
அவருக்கு நாம் செய்ய வேண்டியது, அவர் செய்து வந்ததை நாம் தொடர்ந்து செய்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.
நான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மரக்கன்று வைக்க இருக்கிறேன். சின்ன கலைவாணர் நேசிக்கும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்று நட்டு அவரது இதயத்திற்கு நெருக்கமான அஞ்சலியை செலுத்துவோம். என்று அன்போடு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இதனை நிறைவேற்றும் விதத்தில், தற்போது தன்னுடைய 'மாநாடு' படக்குழுவினருடன் மரம் நட்டு தன்னுடைய அஞ்சலியை செலுத்தியுள்ளார்.