பாத்ரூம் கழுவும் ஃபெனாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற கயல் சீரியல் நடிகை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Kayal Serial Actress Suicide Attempt : சன் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல்களில் கயல் சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் சஞ்சீவ் ஹீரோவாகவும், சைத்ரா ரெட்டி ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். டிஆர்பியில் சக்கைப்போடு போடும் இந்த சீரியல், டாப் 3 இடத்தில் தான் நீடித்து வருகிறது. இந்த சீரியலுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அமுதா
கயல் சீரியல் நடிகை தற்கொலை முயற்சி
இந்நிலையில் கயல் சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கயல் சீரியலில் துணை நடிகையாக நடித்து வருபவர் அமுதா. இவருக்கு வயது 28. இவர் தன்னுடைய கணவர் சக்தி பிரபு என்பவருடம் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்துள்ளார். இதனிடையே அமுதா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரது கணவர் சக்தி பிரபு கடந்த ஒரு வாரமாக ஆவடியில் உள்ள அவரது அம்மாவின் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.
சீரியல் நடிகை அமுதா
ஃபெனாயிலை குடித்த அமுதா
கணவர் பிரிந்து சென்றதால் கடும் மன உளைச்சலில் இருந்த நடிகை அமுதா, தன் வீட்டில் பாத்ரூம் கழுவ பயன்படுத்தும் ஃபெனாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஃபெனாயிலை குடிக்கும் முன்னர் தன்னுடைய தோழிக்கு இந்த தகவலை கூறி இருக்கிறார். இதையடுத்து அவரது தோழி அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார். தற்போது அமுதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கயல் சீரியல் நடிகை அமுதா
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் அமுதா தற்கொலைக்கு முயன்றாரா அல்லது அவரின் இந்த விபரீத முடிவுக்கு வேறேதும் காரணம் இருக்கிறதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.