Vaali : வாலிக்கு கவிஞர் கண்ணதாசன் விஸ்கியை கிஃப்டாக கொடுக்க தூண்டிய பாடல் பற்றி தெரியுமா?
Kannadasan Gifted Whiskey to Vaali : கவிஞர் வாலி எழுதிய பாடலை கேட்டு இம்பிரஸ் ஆன கண்ணதாசன் அவருக்கு விஸ்கியை பரிசாக கொடுத்துள்ளார். அது எந்த பாடல் என்பதை பார்க்கலாம்.

Kannadasan Gifted Whiskey to Vaali
தமிழ் சினிமாவில் 1960களில் வெளியான பல திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களின் நினைவில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன. அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது ‘கண்மலர்’. 1968-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி, செளகார் ஜானகி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.
‘கண்மலர்’ படத்தின் கதை கோவிலைச் சுற்றி நகர்கிறது. கோவிலில் ஓதுவாராக இருக்கும் கதாபாத்திரத்தில் வி. நாகய்யா நடித்திருந்தார். அவரது மகளாக சரோஜா தேவி நடித்திருந்தார்.
Vaali Song: பாடல் வரியை கேட்டு நடிக்க மறுத்த ஹீரோயின் - லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்த வாலி!
கண்மாற்று அறுவை சிகிச்சையை மையமாகக் கொண்ட கதை
கோவிலுக்கு பூமாலைகள் கட்டி கொடுக்கும் பணியை செய்து வரும் அவர், ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தின் மீது காதல் கொள்கிறார். ஆனால் இவர்களது காதல் திருமணத்தை நோக்கி செல்லும் நேரத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்படுகின்றன. இதில் சரோஜா தேவியின் பார்வையும் பறிபோகிறது. தனக்கு மிகவும் நெருக்கமான தோழியின் வாழ்க்கை பாதிக்கப்படுவதை பார்த்த செளகார் ஜானகி, தன்னுடைய கண்களை அவருக்கு தானமாக வழங்கும் முடிவை எடுக்கிறார். கதையின் முக்கிய திருப்பமாக அமைந்த இந்த சம்பவத்தின் மூலம் கண்தானம் மற்றும் கண்மாற்று அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாகவும் இது அமைந்தது.
வாலியின் வரிகளை ரசித்த கண்ணதாசன்
‘கண்மலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு வாலி மற்றும் கண்ணதாசன் இருவரும் பாடல்கள் எழுதியிருந்தனர். அதில் வாலி எழுதிய ‘ஓதுவார் உன் பெயர் ஓதுவார்’ என்ற பாடல் கண்ணதாசனை வெகுவாக கவர்ந்ததாக கூறப்படுகிறது. ஒருமுறை அந்தப் பாடலை கேட்ட கண்ணதாசன், “இவ்வளவு சிறப்பாக நான் எப்போது எழுதினேன்?” என்று தனது உதவியாளரிடம் கேட்டாராம். அதற்கு அவர், அந்தப் பாடலை எழுதியது வாலி என சொன்னதும் கண்ணதாசன் ஆச்சரியமடைந்தாராம்.
வாலியின் வரிகளை கேட்டதும் இம்பிரஸ் ஆன கண்ணதாசன், அதில் இடம்பெற்றிருந்த சில வரிகளை மிகவும் பாராட்டினாராம். அந்த வரிகள் தேவாரப் பாடல் வரிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை என முதலில் நினைத்த கண்ணதாசன், பின்னர் அவை வாலியின் சொந்த கற்பனை என்பதை அறிந்ததும் மெய்சிலிர்த்துப் போனாராம்.
உடனே போன் பண்ணி பாராட்டிய கண்ணதாசன்
வாலியின் திறமையை பார்த்து வியந்த கண்ணதாசன், உடனடியாக அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டினாராம். பாடல் வரிகள் தன்னை எந்த அளவுக்கு கவர்ந்தன என்பதை தெரிவித்ததுடன், வாலியை மனதார வாழ்த்தியிருக்கிறார். அதோடு நிற்காமல், வாலிக்காக ஒரு பரிசையும் அனுப்பியதாக கூறப்படுகிறது. கண்ணதாசன் தனது கார் ஓட்டுநரிடம் அந்தப் பரிசை வாலியிடம் கொண்டு சேர்க்கச் சொல்லியிருக்கிறார்.
வாலிக்கு விஸ்கி பிடிக்கும் என்பதை அறிந்திருந்த கண்ணதாசன், அவர் விரும்பிய விஸ்கி பாட்டிலை பரிசாக அனுப்பினாராம். தன்னுடைய பாடல் வரிகளைப் பாராட்டியதுடன், சக கவிஞரின் திறமையை மனதார கொண்டாடிய கண்ணதாசனின் இந்த செயல் வாலியை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. போட்டி நிறைந்த திரையுலகிலும், ஒரு கவிஞரின் திறமையை மற்றொரு கவிஞர் பொறாமையின்றி பாராட்டிய இந்த சம்பவம், கண்ணதாசன்–வாலி நட்பின் அழகான நினைவுகளில் ஒன்றாக இன்றும் பேசப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

