வழக்கை வாபஸ் வாங்கிய ஜனநாயகன் படக்குழு... சென்சார் போர்டின் அடுத்தக்கட்ட ஆக்ஷன் என்ன?
ஜனநாயகன் படக்குழு, சென்சார் போர்டுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை நீதிமன்றத்தில் வாபஸ் வாங்கி உள்ளது. இதனால் விரைவில் அப்படம் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட இருக்கிறது.

Jana nayagan Movie Case Withdrawn
தொடர்ந்து நீதிமன்றங்களில் பின்னடைவைச் சந்தித்ததை அடுத்து, சென்சார் போர்டுக்கு எதிரான மனுவை 'ஜனநாயகன்' படத் தயாரிப்பாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். விஜய்யின் கடைசிப் படத்தைத் தயாரிக்கும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த வழக்கை மேலும் தொடர விரும்பவில்லை என்றும், படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப சம்மதிப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர்களின் வழக்கறிஞர், உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தை ஏற்றுள்ள நீதிபதி பி.டி.ஆஷா வழக்கை திரும்பப் பெறும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
முடிவின் பின்னணி
நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் தொடர்ந்தால், படத்தின் ரிலீஸ் தேதி நிச்சயமற்றதாகிவிடும் என்பதே தயாரிப்பாளர்களின் இந்த மாற்றத்திற்கான காரணம். இனி தனி நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தால், விசாரணை தொடங்கவே குறைந்தபட்சம் 20 நாட்கள் ஆகும். அதன்பிறகு, சென்சார் போர்டுக்கு எட்டு வாரங்கள் வரை நீதிமன்றம் அவகாசம் அளிக்க முடியும். தனி நீதிபதி அமர்வில் சாதகமான தீர்ப்பு வந்தாலும், சென்சார் போர்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யும். அங்கிருந்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கு நீளும்.
எலெக்ஷன் தேதி அறிவித்தால் சிக்கல்
சட்டப் போராட்டம் தொடர்ந்தால், படம் எப்போது திரைக்கு வரும் என்பதில் நிச்சயமற்ற நிலை நீடிக்கும். தமிழகத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதற்கான தேதி அறிவித்தால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். அப்போது மேலும் சட்டச் சிக்கல்கள் ஏற்படும். அப்படி நடந்தால், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கு ரிலீஸ் தள்ளிப்போகும். தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பின்னடைவைச் சந்தித்தால், விஜய்க்கு இப்போது கிடைக்கும் வரவேற்பு அப்போது கிடைக்காமல் போகலாம்.
தயாரிப்பாளருக்கு நஷ்டம்
சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தின் பொங்கல் வெளியீடு தடைபட்டதால், தங்களுக்கு 100 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். படம் பெட்டியில் இருக்கும் வரை இந்த நஷ்டம் அதிகரிக்கும். மேலும், மற்ற படங்களின் வெளியீடுகளும் இருப்பதால், எதிர்பார்க்கும் ரிலீஸ் தேதி கிடைக்காமல் போகலாம். இது தவிர, ஓடிடி உரிமையை வாங்கியுள்ள அமேசான் பிரைம் வீடியோ போன்ற தளங்களும் ரிலீஸுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள் மனுவைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
ஏன் இந்த முடிவு முன்பே எடுக்கப்படவில்லை?
அப்படியென்றால், ஏன் இந்த முடிவை முன்பே எடுக்கவில்லை என்ற கேள்விக்கு, சென்சார் போர்டு விதிகளில் உள்ள ஒரு ஷரத்துதான் காரணம் என தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. ரிவைசிங் கமிட்டியின் முடிவில் சென்சார் போர்டு தலைவருக்கு திருப்தி இல்லை என்றால், இரண்டாவது ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்ப அவருக்கு அதிகாரம் உள்ளது. 20 நாட்களுக்குள் ரிவைசிங் கமிட்டியை அமைத்தால் போதும். கமிட்டியின் முடிவு வர தாமதமாகலாம். இறுதி முடிவு 25 முதல் 50 நாட்கள் வரை தாமதமாகும். இந்த அச்சம் காரணமாகவே தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் இந்த முடிவை எடுக்கவில்லை. ஆனால், நீதிமன்றத்தில் தொடர் பின்னடைவுகளைச் சந்தித்தபோது, ரிவைசிங் கமிட்டியே மேல் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். படம் தற்போது ரிவைசிங் கமிட்டியின் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது. பிப்ரவரி 20-ம் தேதி படத்தை வெளியிட முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

