- Home
- Cinema
- கங்குவா பட நாயகி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய போலீஸ்
கங்குவா பட நாயகி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய போலீஸ்
Ghaziabad police encounter : கங்குவா பட ஹீரோயின் திஷா பதானி வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

Disha Patani house firing incident
நடிகை திஷா பதானி வீட்டில் நடந்த துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றவாளிகலை தேடி வந்த உத்திர பிரதேச போலீஸ் மற்றும் எஸ்.டி.எஃப் அவர்களை என்கவுண்டர் செய்துள்ளனர். காசியாபாத்தில் நேற்று நடந்த என்கவுன்டரில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் சென்றபோது, அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் இருவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
என்கவுண்டரில் இருவர் கொலை
உ.பி. போலீசார் என்கவுன்டர் செய்த இரண்டு பேரும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ரவீந்திரா என்கிற கல்லு, ரோஹ்தக்கைச் சேர்ந்தவர். மற்றொருவர் அருண், சோனிபத்தைச் சேர்ந்தவர். இருவரும் கோல்டி பிரார் மற்றும் ரோஹித் கோதாரா கும்பலின் முக்கிய உறுப்பினர்கள் என உ.பி. எஸ்.டி.எஃப் தெரிவித்துள்ளது. இவர்கள் மீது உ.பி, ஹரியானா, டெல்லியில் பல கிரிமினல் வழக்குகள் உள்ளன.
சம்பவ இடத்திலிருந்து ஒரு க்ளாக் கைத்துப்பாக்கி, ஒரு ஜிகானா கைத்துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர். இந்த கும்பலுடன் தொடர்புடைய மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சொன்னதை செய்த உ.பி முதல்வர்
வீட்டில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு திஷா பதானியின் குடும்பத்தினர் பீதியடைந்தனர். தாக்குதலுக்குப் பிறகு, நடிகையின் தந்தையும் முன்னாள் டிஎஸ்பியுமான ஜெகதீஷ் பதானியிடம் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார். குற்றவாளிகளை விரைவில் பிடித்து தண்டிப்பதாக உறுதியளித்தார். மேலும், குடும்பத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார்.
திஷா பதானி வீட்டில் நடந்தது என்ன?
செப்டம்பர் 12 அதிகாலை 4 மணியளவில் திஷா பதானியின் வீட்டில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. பைக்கில் வந்த இருவர், பரேலியில் உள்ள திஷா பதானியின் வீட்டில் 9 முதல் 10 ரவுண்டுகள் சுட்டனர். இந்த தாக்குதலுக்கு கேங்க்ஸ்டர் கோல்டி பிரார் சமூக வலைதளத்தில் பொறுப்பேற்றார். திஷாவின் சகோதரி குஷ்பு பதானி, பிரேமானந்த் மகாராஜ் மற்றும் அனிருத்தாச்சார்யா மீது கூறிய கருத்துக்களே தாக்குதலுக்கு காரணம் என கூறப்பட்டது.