'குக் வித் கோமாளி' புகழ் வந்ததால் இப்படி ஆகிடுச்சே..? அபராதம் போட்ட அதிகாரிகள்..!
எங்கிருந்து தான் புகழுக்கு மட்டும் இப்படி பட்ட பிரச்சனைகள் வருதோ... ஏற்கனவே ஒருமுறை, திருநெல்வேலியில் நடந்த கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது, அதிக கூட்டம் சேர்ந்ததால் அந்த கடைக்கு அபராதம் விதித்து சீல் வைத்தனர் அதிகாரிகள். தற்போது புகழ் கலந்து கொண்டு திறப்பு விழா செய்த மற்றொரு கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில், ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தற்போது 'குக் வித் கோமாளி' சீசன் 2 -ல் காமெடியால் கலக்கியவர் புகழ். இவரது பாடி லாங்குவேஜ் மற்றும் முகபாவனையை பார்த்தே பலர் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால் தற்போது, நடிகர் சந்தானம், சிவகார்த்திகேயன், அருண் விஜய், என அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
'குக் வித் கோமாளி' பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், பலர் இவர்களை கடை திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் புகழையும் பல நிகழ்ச்சிகளுக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. புகழும், தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில்... இது போன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் புகழை நேரில் பார்க்க பலர் கூடி விடுவதும் வாடிக்கையாக உள்ளது.
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் புதிதாக திறக்கப்படும் துணிக்கடை ஒன்றை திறந்து வைக்க புகழ் வர உள்ளதாக போஸ்டர் மற்றும் ஸ்பீக்கர் மூலம் அறிவிக்கப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கடை முன் குவிந்து விட்டனர்.
இன்னும் கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்படாத நிலையில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முண்டியடித்து கொண்டு புகழை பார்க்க பலர் முற்பட்டனர். புகழோ... வந்த வேகத்தில் கடையை திறந்து வைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். மேலும் கடை நிர்வாகமும், இதற்கான உரிய அனுமதி மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பதற்கான எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. எனவே இதனை கவனித்த மாநகராட்சி அதிகாரிகள் இந்த கடைக்கு... அபராதம் விதித்தனர்.