கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் 'செவாலியே விருது' அறிவிப்பு
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் ‘செவாலியே’ விருது' கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Chevalier Award for Art Director Thota Tharani
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதாக கருதப்படுவது ‘செவாலியே’ விருது. உலகின் பல பகுதிகளில் கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் இவ்விருதை வழங்கி வருகிறது. கடந்த 1957ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை இவ்விருந்தை வென்றது இருவர் தான். ஒருவர் சிவாஜி கணேசன், அவருக்கு 1995ஆம் ஆண்டு, இவ்விருது வழங்கப்பட்டது. அதேபோல் கமல்ஹாசனுக்கு 2016ஆம் ஆண்டு இவ்விருது வழங்கப்பட்டது.
தோட்டா தரணிக்கு செவாலியே விருது
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான செவாலியே விருது திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ, இந்த விருதை கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு வழங்க இருக்கிறார். கடந்த சில நாட்களாக அவ்வளாகத்தில் தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த தோட்டா தரணி?
தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குநராக கோலோச்சிய தோட்டா தரணி, பல்வேறு மொழி படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். இவர் ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார். தமிழில் வெளியான நாயகன், தளபதி, இந்தியன், சந்திரமுகி, தசாவதாரம், சிவாஜி, பொன்னியின் செல்வன் போன்ற மாஸ்டர் பீஸ் படங்களுக்கு பிரம்மிக்க வைக்கும் வகையில் செட் அமைத்துக் கொடுத்தது தோட்டா தரணி தான். இதில் நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக தோட்டா தரணிக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் இவரது பணியை கௌரவிக்கும் விதமாக கடந்த 2001 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருதும் இந்திய அரசால் வழங்கப்பட்டது.
முதல்வர் பாராட்டு
தற்போது செவாலியே விருது பெற இருக்கும் தோட்டா தரணியை பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “ஆக்ஸ்ஃபோர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணி அவர்களுக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான செவாலியே விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்” என அவர் பதிவிட்டுள்ளார்.