Dhanush Divorce : ஓவர் நைட்டில் தனுஷை உலகளவில் பாப்புலர் ஆக்கிய ஐஸ்வர்யா - இந்த நிகழ்வை மறக்க முடியுமா?
அதிர்ஷ்ட தேவதையாக இருந்த ஐஸ்வர்யாவை, நடிகர் தனுஷ் தற்போது விவாகரத்து செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். இவ்வாறு சினிமாவில் சக்சஸ்புல்லான நடிகராக வலம்வரும் தனுஷ், சொந்த வாழ்வில் தோல்வியை சந்தித்துள்ளார்.
18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி தற்போது பிரிந்துள்ளனர். இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து பிரிவதாக நேற்று இரவு திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டு கோலிவுட்டையே பரபரப்பாக்கினர்.
சினிமாவில் தனுஷின் அசுர வளர்ச்சிக்கு திறமை ஒரு காரணமாக இருந்தாலும், இன்னொரு புறம் ஐஸ்வர்யாவும் முக்கிய பங்காற்றியுள்ளார். தனுஷின் கெரியரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது ‘3’ தான். இப்படத்தை ஐஸ்வர்யா தான் இயக்கி இருந்தார்.
ஐஸ்வர்யாவின் 3 படத்துக்கு முன்னர் வரை தமிழ் சினிமா அளவில் மட்டும் பிரபலமாக இருந்த தனுஷ், இப்படத்துக்கு பின்னர் தான் பான் இந்தியா ஸ்டாராக மாறினார். அதற்கு காரணம் இப்படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல்.
இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத், அறிமுகமானது இப்பாடல் மூலம் தான். கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் யூடியூபில் வெளியான இப்பாடல் ஓவர் நைட்டில் உலகளவில் பாப்புலர் ஆனது. இப்பாடல் வரிகளை எழுதியதும், பாடியதும் தனுஷ் தான். இப்பாடல் உருவாவதற்கு முக்கிய காரணம் ஐஸ்வர்யா தான்.
இதையடுத்து தான் தனுஷுக்கு ராஞ்சனா, ஷமிதாப், அட்ரங்கி ரே போன்ற பாலிவுட் பட வாய்ப்புகளும், தி ஜர்னி ஆஃப் பகிர், தி கிரேமேன் போன்ற ஹாலிவுட் பட வாய்ப்புகளும் கிடைத்தன. இவ்வாறு அதிர்ஷ்ட தேவதையாக இருந்த ஐஸ்வர்யாவை தனுஷ் தற்போது விவாகரத்து செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.