நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவர் தரிசனம்... மருமகன் தனுஷ் வீட்டு பூமி பூஜையில் மாமனார் ரஜினிகாந்த்...!
போயஸ் கார்டன் இல்லத்தை விட்டு வெளியே வருவதை நீண்ட நாட்களாக தவிர்த்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வீட்டை விட்டு வெளியே வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த் வரும் அண்ணாத்த பட படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த சமயத்தில் படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தொற்று இல்லை என்பது உறுதியான போதும், ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு சென்னை திரும்பினர்.
அதன் பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின் படி ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த், அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்தார். தற்போது பூரண உடல் நலம் பெற்று வரும் ரஜினிகாந்த், பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தொடங்க உள்ள அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதில் இருந்தே போயஸ் கார்டன் இல்லத்தை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வீட்டை விட்டு வெளியே வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டாரின் மூத்த மருமகனும், தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவுமான தனுஷ் போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்ட உள்ளார். அதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.
அந்த பூமி பூஜையில் வழக்கமான தன்னுடைய ஒயிட் அண்ட் ஒயிட் ஜிப்பாவில் மாஸ்க் அணிந்த படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டாரின் தரிசனம் கிடைத்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சூப்பர் ஸ்டார் நல்ல உடல்நலத்துடன் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தித்து வந்த ரசிகர்கள் இந்த புகைப்படங்களை கண்டு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.