37 வருடங்களுக்கு பிறகு ரீமேக்காகும் “முந்தானை முடிச்சு”... ஊர்வசி கேரக்டரில் நடிக்கப்போவது யார் தெரியுமா?
37 வருடங்களுக்குப் பிறகு ரீமேக்காகும் கே.பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வந்தவர் பாக்யராஜ். அவருடைய கதை, திரைக்கதை பாணியை யாராலும் அவ்வளவு எளிதியில் கையாள முடியாது.
அப்படிப்பட்ட கே.பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
1983ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், ஊர்வசி கோவை சரளா, தீபா, ‘பசி’சத்யா, நளினிகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஏவிஎம் ஸ்டுடியோ தயாரித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் 37 வருடங்களுக்குப் பிறகு முந்தானை முடிச்சு படத்தை ரீமேக் செய்ய உள்ளனர். ஏவிஎம் சரவணனிடம் இருந்து கே.எஸ்.பி.சதீஷ் ஸ்டுடியோஸ் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளது.
கே.பாக்யராஜ் இயக்க உள்ள இந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் சசிக்குமார் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்தியே .
இந்நிலையில் இந்த படத்திற்கான ஹீரோயின் தேர்வு தீவிரமாக நடைபெற்று வந்தது.
முந்தானை முடிச்சு படத்தில் புதுமுகமாகவே இருந்தாலும் ஊர்வசி, பாக்யராஜுக்கு ஈடுகொடுத்து சிறப்பாக நடித்திருப்பார்.
அதனால் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நாயகியை தேடி வந்தனர். தற்போது ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.