Hansika Divorce : ஒரு ரூபாய் கூட ஜீவனாம்சம் வாங்காத ஹன்சிகா - காரணம் என்ன?
நடிகை ஹன்சிகா மோத்வானி, தன்னுடைய கணவர் சோஹேல் கத்தூரியாவை விவாகரத்து செய்துள்ளார். இருப்பினும் அவர் ஜீவனாம்சமாக ஒரு ரூபாய் கூட வாங்கவில்லையாம். அதைப்பற்றி பார்க்கலாம்.

Hansika Motwani and Sohael Kathuria Divorce
சினிமாவில் அறிமுகமான குறுகிய காலகட்டத்தில் விஜய், தனுஷ், சிம்பு, சூர்யா என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது கணவரும் தொழிலதிபருமான சோஹேல் கத்தூரியாவை விவாகரத்து செய்துள்ளார். வெறும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, இப்போது சட்டப்பூர்வமாக பிரிந்துள்ளது. விவாகரத்துக்குப் பிறகு ஹன்சிகா எவ்வளவு கோடி ஜீவனாம்சம் வாங்கினார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஹன்சிகா மோத்வானி விவாகரத்து
ஹன்சிகா மோத்வானியும், சோஹேல் கத்தூரியாவும் மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுள்ளனர். கடந்த சில காலமாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன. அதை சரிசெய்ய பலமுறை முயன்றும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. கடைசியாக, கசப்பான நினைவுகளுடன் வாழ்வதை விட, பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்துவிடலாம் என இருவரும் முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு எந்தவித பிரச்சனையும் இல்லாமல், இருவரின் சம்மதத்துடனேயே எடுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
ஜீவனாம்சம் குறித்த ஷாக்கிங் தகவல்
பொதுவாக, பிரபலங்களின் விவாகரத்து என்றாலே பல கோடி ரூபாய் ஜீவனாம்சம் கைமாறும். ஆனால் ஹன்சிகா மற்றும் சோஹேல் விஷயத்தில் இது முற்றிலும் மாறுபட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்களின் படி, இந்த ஜோடி ஒருவர் மீது ஒருவர் எந்தவிதமான நிதி சார்ந்த கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. குறிப்பாக, ஹன்சிகா, சோஹேலிடம் இருந்து எந்த ஜீவனாம்சமும் கேட்கவில்லை என்றும், தனக்கு அதன் தேவை இல்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்.
திருமண வாழ்க்கை முறிந்ததற்கு காரணம் என்ன?
ஹன்சிகாவின் வழக்கறிஞர் அத்னான் ஷேக் கூறுகையில், திருமணமான சில நாட்களிலேயே தம்பதியினரிடையே குணம், சிந்தனை மற்றும் வாழ்க்கை முறையில் பெரிய வித்தியாசங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால், சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட தினமும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. ஒரே கூரையின் கீழ் வாழ்வது கடினமாகிவிட்டதால், இந்த ஜோடி பிரிய முடிவு செய்தது என அவர் கூறினார்.
திருமணத்திற்கு 20 கோடி செலவு!
ஹன்சிகாவின் திருமணம் 2022-ல் அதிகம் பேசப்பட்ட திருமணங்களில் ஒன்றாகும். 2022ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி அன்று, ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான 'முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனை'யில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த ராயல் திருமணத்திற்கு சுமார் 20 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அரண்மனையின் பிரீமியம் அறைகளின் ஒரு நாள் வாடகை மட்டுமே சுமார் 60,000 ரூபாய். இந்த திருமணத்தின் பிரம்மாண்டத்தையும், அதன் தயாரிப்புகளையும் ஒரு டாக்குமெண்டரியாக படமாக்கி, அதன் உரிமையை ஒரு பெரிய தொகைக்கு OTT தளத்திற்கு விற்றிருந்தனர்.
ஈபிள் டவர் முன் ப்ரொபோஸ் செய்த சோஹேல்
பாரிஸில் உள்ள ஈபிள் டவர் முன்பு சோஹேல் கத்தூரியா, ஹன்சிகாவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்த ஹன்சிகா, "இப்போதும் எப்போதும்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஒரு கனவுக் கதை போலிருந்த இந்த காதல், வெறும் நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்திருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

