நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்... சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்..!
மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத்திற்கு கடந்த 9ம் தேதி திடீர் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூ-வில் சஞ்சய் தத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைக் கேள்விப்பட்ட ரசிகர்களும், பாலிவுட் திரையுலகினரும் சஞ்சய் தத் உடல் நலம் பெற வேண்டி தீவிர பிரார்த்தனை செய்தனர்.
மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
ரசிகர்களின் வேண்டுதலுக்கு பலனாக உடல் நலம் சீரானதைத் தொடர்ந்து நடிகர் சஞ்சய் தத் நேற்று வீடு திரும்பினார். சஞ்சய் தத் வீடு திரும்பிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.
தற்போது சஞ்சய் தத்தை மருத்துவர்கள் ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் நேற்று சஞ்சய் தத் சினிமாவை விட்டு சிறிது காலம் விலக இருப்பதாக அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், நண்பர்களே, மருத்துவ ரீதியான காரணங்களால் நான் என் சினிமா பணியிலிருந்து சிறுது காலம் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். என் குடும்பத்தினரும், எனது நண்பர்களும் என்னுடன் உள்ளனர். எனது நலம் விரும்பிகள் யாரும் கவலைப்படவோ, தேவையின்றி எதுவும் யூகிக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் நல் வாழ்த்துகளோடு நான் விரைவில் மீண்டும் திரும்பி வருவேன்" என குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து 2 தினங்களுக்கு முன்பு வீடு திரும்பிய சஞ்சய் தத், புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.
சஞ்சய் தத்திற்கு புற்றுநோய் இருப்பதை அறிந்த ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் அவர் விரைவில் குணமடைந்து நாடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தனக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதும் சஞ்சய் தத் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், துபாயில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை நினைத்து கவலைப்பட்டதாகவும் அவருடைய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.