- Home
- Business
- Vegetable Price: ஒரே நாளில் இரண்டு மடங்கு விலை உயர்ந்த காய்கறிகள்.! காரணம் ஐயப்ப பக்தர்களா?!
Vegetable Price: ஒரே நாளில் இரண்டு மடங்கு விலை உயர்ந்த காய்கறிகள்.! காரணம் ஐயப்ப பக்தர்களா?!
கார்த்திகை மாத விரதம் மற்றும் கனமழை காரணமாக தமிழகத்தில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் பீட்ரூட், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை இருமடங்காகியுள்ளது, இந்த விலை உயர்வு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காய்கறிகள், பழங்கள் விலை உயர காரணம் இதுதான்.!
கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள இந்த காலத்தில், தமிழகத்தின் பல பகுதிகளில் காய்கறி விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் கார்த்திகை விரதம், சபரிமலை மாலை அணிதல் போன்ற ஆன்மிக காரணிகளால் காய்கறி, பழ வகைகளின் தேவை அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் அதே நிலை அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக பலரும் விரத உணவு முறையைப் பின்பற்றுவதால், பச்சை காய்கறிகளின் தேவை திடீரென உயர்ந்துள்ளது. இதனுடன் சேர்ந்து சில மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, காய்கறி உற்பத்தியை பாதித்து வரத்து குறைவதற்கும் முக்கிய காரணமாக உள்ளது. மழையால் காய்கறி பயிர்களின் தரம், அளவு இரண்டும் குறைந்ததால் சந்தைகளில் விலை உயர்வு தவிர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
விலை தெரிஞ்சுகிட்டு காய்கறி வாங்க போங்க
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இதன் தாக்கம் தெளிவாகப் புலப்படுகிறது. வழக்கத்தை விட பச்சை காய்கறிகளின் விலை இடையே இடையே உயர்ந்து வருகின்றது. பீட்ரூட் ஒரு கிலோ 50 ரூபாயாகவும், வெண்டைக்காய் 40 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. இது கடந்த வாரம் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தினசரி சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் கத்திரிக்காய் 30 முதல் 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது கடந்த வாரம் 10 ரூபாயக்கு விலை போனது.
இரண்டு மடங்கான காய்கறிகள் விலை
உருளைக்கிழங்கு 50 ரூபாய், சின்ன வெங்காயம் 60 ரூபாய் என உயர்ந்த விலையில் கிடைக்கிறது. அவரைக்காய் 70 ரூபாய், கேரட் 60 ரூபாய், இஞ்சி 100 ரூபாய் என விலை ஏற்றம் தொடர்கிறது. அதேபோல் பீன்ஸ் 60 ரூபாய், முள்ளங்கி 45 ரூபாய் என விற்பனையாகிறது. தக்காளி 45 முதல் 60 ரூபாய் வரை மாறுபடுகிறது.
வெங்காயம் விலை இதுதான்
இதற்கு மாறாக, பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 20 முதல் 25 ரூபாய் வரை குறைவாக நிலைத்திருக்கிறது. இதுவே சந்தையில் ஒரே அளவுக்கு ஸ்திரமாக உள்ள காய்கறி விலை என கூறலாம். மழை, வரத்து குறைவு, விரத காலத் தேவை அதிகரிப்பு ஆகிய மூன்று காரணிகளும் சேர்ந்ததால், காய்கறி விலை இன்னும் சில நாட்கள் உயர்ந்த அளவில் தொடரக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.