Organic Farming: ரூ.5 கோடி வரை கடன் உதவி! இயற்கை விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி!
மண்ணின் வளம் குறைந்து வருவதையும், இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஐஓபி வங்கியின் ஹரித் கிராந்தி திட்டம் போன்ற முயற்சிகள், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதையும், விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதையும் எடுத்துரைக்கிறது.

மண் வளம் காக்கும் இயற்கை விவசாயம்
இன்றைய காலகட்டத்தில் மண் நம் கண்ணுக்கு தெரியாமல் மெதுவாக தனது வளங்களை இழந்து வருகிறது. 30 வருடங்களுக்கு முன்பு இருந்த மண்ணின் வளம் இன்று பாதியாக குறைந்துவிட்டது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் மண் மலடாகி சாகுபடி செய்ய முடியாத நிலை வரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதை தடுக்க ஒரே வழி – இயற்கை விவசாயம் அல்லது நன்னெறி வேளாண்மை. விவசாயிகள் பலரும் இயற்கை விவசாயத்திற்கு மாறி வரும் நிலையில், பொதுமக்களும் இயற்கை விவசாய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயத்தில் ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் பதிலாக உயிர்சக்தி மிகுந்த இயற்கை உரங்கள், பசுந்தீவனைகள் மற்றும் உயிர் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மண்ணின் உயிர்தன்மையையும் சத்துகளையும் பாதுகாப்பதோடு, நீண்டகால உற்பத்தி திறனை தருகின்றன. இதனால் விவசாயிகளின் வருமானமும் நிலைத்திருக்கும். சுற்றுச்சூழல் மாசுபடாமல் நம் குழந்தைகளுக்கும் பசுமையான உலகத்தை விட்டுச் செல்ல இயலும். இயற்கை விவசாயத்தை முறையாக கையாண்டால் அதிக லாபம் கிடைக்கும் என்று விவசாய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூ.5 கோடி வரை கடன்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) இதை ஊக்குவிக்க பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தனிநபராக ரூ.5 கோடி வரை கடன் வழங்கும் ஹரித் கிராந்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் நம்மூரின் விவசாயிகள் இயற்கை முறையில் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம் எனவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது. அதற்கும் மேலாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கே ரூ.10 கோடி வரை கடன் வழங்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படட்டுள்ளது.
"விவசாயம் நம் நாட்டுக்கு பெரும் மாற்றத்தை தரும்"
இன்ஃபினிட் சேவா அமைப்பின் தலைவர் நளினி பத்மநாபன், இயற்கை விவசாயம் நம் நாட்டுக்கு பெரும் மாற்றத்தை தரும் என்றும், வளர்ச்சியடைந்த இந்தியா பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ரிச் ப்ளஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் சாரங்கன், “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்! நம் நாட்டை உயர்த்திவைக்கும் சக்தி விவசாயம் மட்டுமே” என்று உணர்ச்சியுடன் பேசினார்.
இயற்கை விவசாயமே சிறந்த வழி
தமிழ்நாடு நபார்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் ஆர். ஆனந்த், “ஒரு காலத்தில் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் ஆரோக்கியம் கிடைத்தது. ஆனால் இன்று அது போதாது. அதே அளவிற்கு நச்சுப்பொருள் நம் உணவில் இருக்கிறது. இதை மாற்ற இயற்கை விவசாயமே வழி” என்று வலியுறுத்தினார்.
இயற்கை விவசாயம் சவாலான காரியம்
அமுல் நிறுவனம் என்றும் விவசாயிகளின் நலனில் உறுதியுடன் தன்னை அர்ப்பணித்து வந்தது. அதன் தலைவர் கோபால் சுக்லா, நியாயமான விலை மற்றும் வலுவான கொள்முதல் அமைப்புகள் மூலம் இயற்கை விவசாயத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதி தெரிவித்தார். இயற்கை விவசாயம் செய்வது சவாலான காரியம். ஆனால் நம் மண்ணையும் உடலையும் காப்பாற்றும் புண்ணிய செயல்.
இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம்
அரசு, வங்கி, நிறுவனங்கள் ஆகியவை இந்த புண்ணியத்துக்கு துணை நிற்க, விவசாயிகளும் துணிச்சலுடன் முன்னேற வேண்டும். நம்முடைய நாட்டை மீண்டும் பசுமையான நாடு ஆக்குவதற்கு இதுவே முதற்படி!