- Home
- Business
- இனி கழுதை வளர்த்தே கோடீஸ்வரராகலாம்.! ரூ.50 லட்சம் வரை மானியம்.! எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ.!
இனி கழுதை வளர்த்தே கோடீஸ்வரராகலாம்.! ரூ.50 லட்சம் வரை மானியம்.! எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ.!
Donkey farming subsidy India 2026 in Tamil : கழுதை பண்ணை அமைக்கும் தொழிலுக்கு மத்திய அரசு ரூ.50 லட்சம் மானியமாக வழங்குகிறது. அந்த திட்டம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கழுதை பண்ணை அமைக்க மானியம்
நம் ஊர்களில் “நீ எல்லாம் கழுதை மேய்ப்பதற்கு தான் லாயக்கு” என திட்டுவது வழக்கம். ஆனால் இப்போது கழுதை மேய்ப்பது சிறந்த தொழிலாக மாறி இருக்கிறது. மத்திய அரசு இந்த தொழிலுக்காக ரூ.50 லட்சம் வரை மானியம் அளிக்கிறது. அதை எப்படி பெறுவது? அதற்கான தகுதிகள் என் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தேசிய கால்நடை வளர்ப்பு திட்டத்தின் கீழ் கால்நடை தொழில்களை தொடங்குவதற்கு நிதி உதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அழிந்து வரும் நாட்டு இன கழுதைகளை பாதுகாக்கவும், கிராமப்புறங்களில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் 50% மானியம் (அதிகபட்சம் ரூ.50 லட்சம்) வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
குறைந்து வரும் கழுதைகளின் எண்ணிக்கை
இந்தத் திட்டத்தின் நோக்கம் இந்தியாவில் வேகமாக குறைந்து வரும் கழுதைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான். இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அதை தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கழுதைகளின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 1.23 லட்சம் கழுதைகள் மட்டுமே உள்ளன. இது 2012 ஆம் ஆண்டு ஒப்பிடும் பொழுது சுமார் 60% குறைவாகும்.
50% மானியம் (அதிகபட்சமாக ரூ.50 லட்சம்)
நாட்டு கழுதை இனங்களை பாதுகாக்கவும், கால்நடை வளர்ப்பை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்காகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கழுதை பாலுக்கு சர்வதேச சந்தையில் அதிக கிராக்கி இருப்பது மற்றும் இனப்பெருக்க விற்பனை மூலம் வருமானத்தை உயர்த்துவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
திட்டத்திற்கான மொத்த செலவில் 50% மூலதன மானியம் வழங்கப்படும். ஒரு யூனிட்டுக்கு அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியம் கிடைக்கும். மானியம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும். முதல் தவணை வங்கியானது கடனை அங்கீகரித்த பின்னரும், இரண்டாம் தவணை பண்ணை பணிகள் முடிந்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரும் வழங்கப்படும்.
தகுதிகள்
கழுதை பண்ணை அமைக்கும் ஆர்வம் இருப்பவர்கள் குறைந்தது 50 நாட்டு இனத்தைச் சேர்ந்த பெண் கழுதைகள் மற்றும் ஐந்து ஆண் கழுதைகளை வைத்திருக்க வேண்டும். இந்த மானியம் நாட்டு இன கழுதைகளை வளர்ப்பதற்கு மட்டுமே பொருந்தும். கால்நடை வளர்ப்பு தொடர்பான பயிற்சி அல்லது அனுபவம் இருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும். தனிநபர்கள், சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர், அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கள் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
இதற்கு விண்ணப்பிக்க விரிவான திட்ட அறிக்கை, விண்ணப்பதாரரின் ஆதார் கார்டு, பான் கார்டு, புகைப்படம், நில ஆவணங்கள் (சொந்த நிலம் அல்லது குத்தகை ஒப்பந்தம்) வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஆறு மாத வங்கி அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டம் முற்றிலும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் மத்திய அரசின் https://nlm.udyamimitra.in/ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
ஆயிரக்கணக்கில் லாபம் ஈட்டலாம்
கழுதை பால் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ குணங்களுக்காக லிட்டர் ஒன்றுக்கு பல்லாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது ஒரு சிறந்த எதிர்கால தொழிலாகவும் பார்க்கப்படுகிறது. நீங்கள் ஒரு தரிசு நிலம் வைத்திருக்கும் பட்சத்தில் அதில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாம் என்று விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். கழுதைப் பால் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து ஆயிரக்கணக்கில் வருமானம் பார்க்க முடியும். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

