மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: அகவிலைப்படியில் புதிய மாற்றம்!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வருவதால், மொத்த அகவிலைப்படி 58% ஆக உயர்ந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள்
தசரா, தீபாவளி பண்டிகைகளுக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. மத்திய அமைச்சரவை அகவிலைப்படியை 3% உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும். இந்த முடிவால் சுமார் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
ஊதிய உயர்வு
இதில் 48 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் அடங்குவர். இதுவரை 55% ஆக இருந்த டிஏ, தற்போது 58% ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி 1, 2025 முதல், அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) 2% உயர்த்தப்பட்டது. இதனால் 53%ல் இருந்து 55% ஆக உயர்ந்தது. தற்போது மீண்டும் 3% உயர்த்தப்பட்டதால், மொத்தம் 58% ஆக உள்ளது.
நிலுவைத் தொகை
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாத நிலுவைத் தொகை அக்டோபர் மாத சம்பளத்துடன் வழங்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு முன்பு இது ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும். அகவிலைப்படி (DA) ஊழியர்களுக்கும், அகவிலை நிவாரணம் (DR) ஓய்வூதியதாரர்களுக்கும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வழங்கப்படுகிறது.
7வது ஊதியக் குழு
ஜனவரி மற்றும் ஜூலையில் இந்த படி திருத்தப்படுகிறது. இந்த முறை எடுக்கப்பட்ட முடிவு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி கடைசி உயர்வாகக் கருதப்படுகிறது.