- Home
- Business
- இனிமே LPG கேஸ் வாங்கவே வேண்டாம்.! வருகிறது புதிய மாற்று.! கரண்ட் மாதிரி இனிமே 24 மணி நேரமும் கேஸ் கிடைக்கப்போகுது.!
இனிமே LPG கேஸ் வாங்கவே வேண்டாம்.! வருகிறது புதிய மாற்று.! கரண்ட் மாதிரி இனிமே 24 மணி நேரமும் கேஸ் கிடைக்கப்போகுது.!
Benefits of Piped Natural Gas : இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றாக உருவெடுத்துள்ள பிஎன்ஜி (PNG) கனெக்சன் குறித்தும், அதை பெறுவது எப்படி என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு
மத்திய ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஈரானின் ஹார்மோஸ் ஜலசந்தியை கடந்து கச்சா எண்ணெய் இந்தியாவை வந்தடைவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சமையல் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்டவை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிகத்திற்கான சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்கள் 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே புக் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிஜிக்கு மாற்று பிஎன்ஜி
சிலிண்டர் தட்டுப்பாடால் ஹோட்டல் மற்றும் உணவுத்தொழில் நடத்தி வருபவர்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பணி நிமித்தமாக வெளியூரில் தங்கி இருந்த வேலை பார்ப்பவர்கள் இந்த விலை உயர்வால் கடுமையான அவதிக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு எல்பிஜி இணைப்பு வைத்திருப்பவர்கள் வீட்டில் பிஎன்ஜி குழாய் இயற்கை எரிவாயு இணைப்பு பெறுவதற்கான வசதி இருந்தால் அதை மாற்றிக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
பிஎன்ஜி (PNG) என்றால் என்ன?
பிஎன்ஜி (Piped Natural Gas) என்பது குழாய் வழி கிடைக்கும் ஒரு இயற்கை எரிவாயு ஆகும். சிலிண்டர்கள் மூலம் கேஸ் வழங்குவதற்குப் பதிலாக தண்ணீர் குழாய் போல நேரடியாக வீட்டிற்கு எரிவாய் கிடைக்கும் ஒரு நவீன வசதி ஆகும். இந்த முறையில் சிலிண்டர் தீர்ந்து விடும் என்கிற கவலை இருக்காது. 24 மணி நேரமும் கேஸ் சப்ளை இருந்து கொண்டே இருக்கும். இது எல்பிஜி சிலிண்டர்களை விட மிகவும் பாதுகாப்பானது. இது இயற்கை வாயு என்பதால் காற்று விட லேசானது. கசிவு ஏற்பட்டாலும், காற்றில் விரைவாக கலந்து விடும் என்பதால் பாதுகாப்பு அம்சத்தில் எல்பிஜியை காட்டிலும் சிறப்பான தேர்வாக இருக்கிறது.
பிஎன்ஜியின் சிறப்பம்சங்கள்
நாம் மின்சாரத்தை பயன்படுத்தி விட்டு எவ்வளவு பயன்படுத்தி இருக்கிறோமோ அதற்கு ஏற்ப பணம் செலுத்துகிறோம். அதுபோல பிஎன்ஜியிலும் பயன்படுத்திய அளவிற்கு பணம் செலுத்தினால் போதுமானது. சிலிண்டரைப் போல் முன்னரே பணம் செலுத்த தேவையில்லை. எவ்வளவு கேஸ் பயன்படுத்துகிறீர்களோ அதற்கு மட்டும் மாத இறுதியில் பணம் செலுத்தினால் போதும். சமையலறையில் பெரிய சிலிண்டர்களை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. குழாயுடன் ஒரு சிறிய மீட்டர் மட்டும் பொருத்தப்பட்டிருக்கும். நகரம் முழுவதும் பூமிக்கு அடியில் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு, சமையலறைக்கு ஒரு இணைப்பு மட்டும் கொடுக்கப்படும். பயன்பாட்டை கணக்கிட சமையலறையில் சிறிய மீட்டர் பொருத்தப்படும். சமைக்கும் அடுப்பில் சில மாற்றங்கள் செய்து இது இணைப்பில் இணைக்கப்படும்.
விரைவில் அனைத்து நகரங்களிலும் பிஎன்ஜி சேவை
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை போன்ற இடங்களில் பிஎன்ஜி இணைப்பு குழாய்கள் இணைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்தியாவில் அதிக அளவு பிஎன்ஜி உற்பத்தி செய்யப்படுவதால் இதுபோன்ற சூழல்களில் நமக்கு கேஸ் தட்டுப்பாடு ஏற்படாது. இந்தியாவில் ஏற்கனவே 60 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் இந்த இணைப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் இந்த சேவையை வழங்கி வருகின்றன. செக்யூரிட்டி டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியிருக்கலாம். புதிய இணைப்பு பெறுவதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். தொழில்நுட்ப நிபுணர்கள் வீட்டிற்கு வந்து பிஎன்ஜி இணைப்பு வழங்கும் வசதி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பின்னரே இதற்கு நாம் விண்ணப்பிக்க முடியும்.
பிஎன்ஜி எவ்வாறு செயல்படுகிறது?
சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்ட பிறகு குழாய்களை பதிப்பது, கேஸ்மீட்டர் பொருத்துவது ஆகிய பணிகள் நடைபெறும். பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பிறகு உங்கள் வீட்டிற்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படும். அதன் பின்னர் 24 மணி நேரமும் கேஸ் விநியோகம் சீராக வந்து கொண்டே இருக்கும். தற்போதைக்கு இது பெரிய நகரங்களில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையை விட பிஎன்ஜிக்கு மாதம் 20% வரை குறைவாகவே செலவாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய சென்னை, வடசென்னை, பெரம்பூர், ராயபுரம், சோழிங்கநல்லூர், தாம்பரம் ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் பிஎன்ஜி இணைப்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

