கடலூா் நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 21 வயது பெண் ஒருவர் கடலூா் மஞ்சக்குப்பத்திலுள்ள கடையில் வேலை பாா்த்து வந்தார். அண்மையில் இரவு வேலையை முடித்துவிட்டு வெளியே கிளம்பி சென்றார்.
தனது காதலரான 23 வயது இளைஞருடன் கம்மியம்பேட்டை பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் சென்று தனிமையில் பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 3 பேர் அவர்களை மிரட்டி கத்தி முனையில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் பெண்ணின் காதலனை கட்டிப்போட்டிவிட்டு அவன் வைத்திருந்த செல்போன், பணம் போன்றவற்றை பறித்து வைத்துக் கொண்டனர்.

அதில் ஒருவர் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய, பின்னர் மூவரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். 'இதை வெளியில் சொன்னால் உங்கள் வீடியோவை எல்லோருக்கும் அனுப்பி விடுவோம்' என்று மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் கடலூர் குப்பன்குளம் காலனி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் கிஷோர்(19), நாகப்பன் மகன் சதீஷ்(எ)சதீஷ்குமார்(19), புதுப்பாளையம் ஷாஜஹான் மகன் ஆரிப் என்கிற சையத் ஆரிப்(19) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் பரிந்துரைத்தாா். அதன் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று வாலிபர்களும் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
