’நேர்மையான அதிகாரி’ விருது பெற்ற பெண் தாசில்தார் குவித்த லஞ்சம்... கட்டுக் கட்டாய் பணம் பறிமுதல்..!
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறந்த அதிகாரி என மாநில அரசு விருது பெற்ற பெண் தாசில்தார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.93.5 லட்சம் பணம் மற்றும் 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறந்த அதிகாரி என மாநில அரசு விருது பெற்ற பெண் தாசில்தார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.93.5 லட்சம் பணம் மற்றும் 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா, ரங்கா ரெட்டி மாவட்டத்தில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் லாவண்யா. இவர் ஐதராபாத்தில் உள்ள ஹயாத்நகரில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் பாஸ்கர் என்கிற விவசாயி தனது நிலத்தின் ஆவணங்களில் உள்ள பிழையை நீக்க விஏஓ அந்தையாவை அனுகி உள்ளார்.
அவர் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்டதால், அது தொடர்பாக தாசில்தார் லாவண்யாவிடம் முறையிட்டார். அப்போது தனது பிரச்னையை தீர்த்து வைக்கும்படி தாசில்தார் லாவண்யாவின் காலில் விழுந்து அழுது, புலம்பினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த வீடியோ லஞ்ச ஒழிப்பு துறையினரின் பார்வைக்கு சென்றதை அடுத்து, லாவண்யா மற்றும் அந்தையாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் தற்போது மற்றொரு விவசாயி, தனது நிலத்தின் ஆவணங்களில் திருத்தம் செய்வதற்காக விஏஓ.,விடம் சென்றுள்ளார். அவரிடம் ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் ரூ.5 லட்சம் லாவண்யாவிற்கு பங்கு செல்லும் என கூறப்படுகிறது.
பணம் கைக்கு வந்ததும் விஏஓ., அந்தையா, லாவண்யாவை தொடர்பு கொண்டு, தகவல் அளித்துள்ளார். அப்போது கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், லாவண்யாவிடம் விசாரித்துள்ளனர். தன் மீதான குற்றச்சாட்டை லாவண்யா மறுத்துள்ளார். இருப்பினும் லாவண்யாவின் சொகுசு வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்ட போது ரூ.93.5 லட்சம் பணமும், 400 கிராம் தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.