காதலை ஏற்க மறுத்து மாணவி செருப்பால் அடித்ததால் ஆத்திரம்..குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை...
திருச்சியில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை, தனது நண்பர்களுடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து குடிக்க வைத்து, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் வள்ளி. 19 வயதாகும் இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். மேலும் பெல் நிறுவனம் அருகே உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கிருந்து கல்லூரிக்கு சென்ற வந்ததாக தெரிகிறது.
கடந்த 17 ஆம் தேதி கடுமையான வயிற்று வலி காரணமாக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வள்ளியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் விஷம் குடித்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து, பெல் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வந்த போலீசார், சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி வள்ளியிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க: இரவில் மாணவன் தலையில் கல்லை போட்டு கொலை.. வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த போது விபரீதம் !
கல்லூரி மாணவி வள்ளி கொடுத்த வாக்குமூலத்தில், கடந்த ஒரு மாதமாக கல்லூரிக்கு சென்றுவரும் போது தன்னை ஒருவர் பின் தொடர்ந்து வந்ததாக கூறியுள்ளார். இதனிடையே கடந்த 11 ஆம் தேதி கல்லூரி முடித்துவிட்டு வரும் போது, தன்னை வழிமறித்து அந்த நபர் என்னிடம் காதலிப்பதாக தெரிவித்தார். அதனால் நான் அவரை செருப்பால் அடித்ததாகவும் அந்த மாணவி கூறியுள்ளார்.
இந்நிலையில் மறுநாள் 12 ஆம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று திரும்பி வீட்டிற்கு வரும் போது, என்னை காதலித்ததாக கூறி அந்த நபரும் மற்றும் அவருடன் இன்னும் 2 பேரும் வந்து, என்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, சந்தில் வைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கடந்த 13 ஆம் தேதியிலிருந்து அரசு மருத்துவமனை உள்ளிட்ட சில இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மூன்று பேரையும் தேடிவந்த நிலையில், அதில் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் கடந்த 21 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கல்லூரி மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கொலைக்கு காரணமான மூன்று பேரை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை உடன்பாட்டை எட்டாததால், தடியடி நடத்தி காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் 45 நிமிடம் தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க: மனைவிக்கு ஒயாத டார்ச்சர் கொடுத்த வாலிபர்.. நடுமண்டையில் ஒரே போடு.. தடுக்க வந்தவருக்கு துண்டானது..எது தெரியுமா?