ரயிலுக்காக காத்திருத்த இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல்.? குற்றவாளிக்கு கடும் தண்டனை- ராமதாஸ் ஆவேசம்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனபா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இளம்பெண் பாலியல் வன்கொடுமை.?
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னைக்கு செல்வதற்காக செங்கல்பட்டு தொடர்வண்டி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த இளம்பெண், 4 பேர் கொண்ட கும்பலால் மகிழுந்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது! தொடர்வண்டி நிலையத்தில் இளம்பெண்ணை கடத்தி, பல கிலோமீட்டர் தொலைவுக்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறது என்றால், அதற்கு பாதுகாப்பு குறைபாடுகள் தான் காரணம் ஆகும். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்!
கடும் தண்டனை-ராமதாஸ்
பாலியல் வன்கொடுமை செய்தால், மிகக்குறைந்த காலத்தில் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லாதது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். பாலியல் குற்ற வழக்குகளில் விரைவாக தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்! இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். பொது இடங்களிலும், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்
எடப்பாடி அணியின் வேட்பாளரை ஆதரிப்பாரா ஓபிஎஸ்..! எதிர்பார்ப்பில் அதிமுக நிர்வாகிகள்