எடப்பாடி பழனிசாமி அணி சார்பாக ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசை ஓ.பன்னீர் செல்வம் ஆதரிப்பது தொடர்பான முடிவு இன்று மாலை தெரியவரும் என கூறப்படுகிறது.

ஒற்றை தலைமை மோதல்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஈரோடு இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் இரண்டு தரப்புக்கும் கிடைக்காமல் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் தன்னை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார். 

வேட்பாளர் யார்- உச்சநீதிமன்றம் உத்தரவு

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில், அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவே இறுதி செய்யும், வேட்பாளரை தேர்வு செய்யும் விவகாரத்தில் பொதுக்குழுவில் வாக்கு எடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழு முடிவுகளை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் தற்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஈரோடு இடைத்தேர்தலுக்கு மட்டுமே என தெரிவித்திருந்தது. 

இபிஎஸ் வேட்பாளரை ஆதரிப்பாரா ஓபிஎஸ்.?

இந்த உத்தரவு தொடர்பாக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூறுகையில், உச்சநீதிமன்றம் நியமித்துள்ள ஆணையராகவே தமிழ்மகன் உசேனை பார்க்கிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவரை ஆதரிப்போம் என தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ஒப்புதலுக்கான படிவம் விநியோகம் செய்யும் பணி நேற்று கொடங்கிய நிலையில், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், சி.வி.சண்முகம் ஒப்புதல் படிவத்தை திரும்ப பெறும் தீவிரமாக ஈடுபட்டனர். இதனையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலைக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரான தென்னரசை ஓ.பன்னீர் செல்வம் ஏற்பாரா என்பதை இன்று மாலைக்குள் தெரியவரும் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

எனது கல்லூரி நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவு வேதனையளிக்கிறது.! துடி துடித்து போன முதலமைச்சர் ஸ்டாலின்