ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சுவரில் அடித்து கொலை செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம், அன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (28). இவர் தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த ஹரிஹரசுதன், பக்கத்து வீட்டில் இருந்த 5 வயது சிறுமியிடம் தனது வீட்டில் பூனைக்குட்டி உள்ளதாக ஆசைவார்த்தை கூறி அதனை பார்க்க வருமாறு அழைத்துள்ளார். சிறுமி வீட்டிற்குள் சென்றவுடன் கதவை தாளிட்டுக்கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

அப்போது, சிறுமி அழுதுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஹரிஹரசுதன் சிறுமியின் தலையை சுவரில் அடித்து கொலை செய்ய முயன்றுள்ளார். இந்நிலையில், சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், அங்கு திரண்டு வந்து கதவை திறக்க முயன்றனர். ஆனால், கதவு உள்பக்கம் தாள் இடப்பட்டிருந்ததால், திறக்க முடியவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்ற அக்கம் பக்கத்தினர், ஹரிஹரசுதனுக்கு தர்ம அடி கொடுத்து அன்னூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுமியை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அன்னூர் போலீசார் ஹரிஹரசுதனை கைது செய்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அன்னூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
