நாகையில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான நபர்களுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், விசைப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக நாகை தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நாகை துறைமுகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், 4 கோடி ரூபாய் மதிப்பிலான 400 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் தொடர்புடைய அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் மோகன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலம்பரசன், நிவாஸ், கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீசன், பாப்பாகோவிலை சேர்ந்த சரவணன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான சிலம்பரசன் மற்றும் அவருடைய நண்பர்களோடு நாகை நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி சொகுசு ஹோட்டலில் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதையடுத்து, புகாருக்கு உள்ளான காவல் ஆய்வாளர் பெரியசாமியை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து, தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : PUBG Madan : பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து.! சென்னை ஐகோர்ட் உத்தரவு !!