கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 நபர்களை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று குற்ற வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த சரவணம்பட்டி மனோஜ் மற்றும் கோகுல் ஆகியோர் மீது 5 பேர் கொண்ட கும்பல் அரிவாலால் கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து மிகவும் சாதாரணமாக நடந்து சென்றது. இந்த சம்பவத்தில் கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தமிழக காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரது செல்பேன் சிக்னல் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் இருந்தது. இதனை வைத்துக் கொண்டு கோத்தகிரி காவல் துறையினர் அவர்களை தொடர்ந்து தீவிரமாக தேடி வந்தனர்.

அதன்படி இன்று குற்றம் சாட்டப்பட்ட 5 நபர்களும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஜோஸ்வா தேவபிரியன், அருண் குமார், கௌதம், ஹரி, பரணி என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.