12 வயது சிறுவன் கொடூரமாக அடித்துக்கொலை..! நண்பர்கள் வெறிச்செயல்..!
திருச்சி அருகே மாயமான சிறுவன் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டுள்ளான்.
திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் அலியார். இவரது மனைவி நிஷா. இந்த தம்பதியினருக்கு அப்துல் வாகித்(12) என்கிற மகன் இருந்துள்ளான். படிப்பு சரியாக வராததால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டிலேயே சிறுவன் இருந்து வந்துள்ளான். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அப்துல் காணாமல் போயிருக்கிறான். பல இடங்களில் தேடியும் அவனைக் காணாததால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
வழக்கு பதிவு செய்திருந்த காவலர்கள், சிறுவனை தேடி வந்தனர். இதனிடையே இன்று காலையில் அரியமங்கலத்தில் இருக்கும் குப்பை கிடங்கில் சிறுவன் பிணமாக கைப்பற்றப்பட்டுள்ளான். அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சிறுவன் உடல் ரத்த காயங்களுடன் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அவன் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
அதன்படி அந்தப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் முத்துக்குமார்(22) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்துலை கொலை செய்தது தெரிய வந்தது. இரும்பு பொருட்களை எடுத்து திருடி விற்ற பணத்தை பங்கு பிரிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அப்துல் கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டிருக்கிறது.
12 வயது சிறுவன் ஒருவன் நண்பர்களால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.