காலா-வின் பெயரால் நடக்கும், கட்டண கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினி? அன்புமணி ராமதாஸ் கேள்வி
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்திருக்கும் காலா திரைப்படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஜூன்7 அன்று இத்திரைப்படத்தை திரையிட முடிவு செய்திருக்கும் காலா படக்குழு, சமீப காலமாக கடும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அரசியலில் கால் பதிக்க ரஜினி செய்துவரும், சமீபகால நடவடிக்கைகள் தான் இதற்கு காரணம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை, நேரில் சந்தித்த ரஜினி தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டி, அவருக்கு இப்போது கடும் தலைவலியாக மாறி இருக்கிறது. இதில் ரஜினி கூறிய பொறுப்பற்ற பதில்களால் கடுப்பாகி இருக்கும் மக்கள், தமிழகத்தில் காலாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகாவிலும் வேறு மாதிரியான எதிர்ப்பு ரஜினிக்கு எழும்பி இருக்கிறது.
இத்தனை பிரச்சனைகளுக்கு இடையேயும், காலா படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடர்பாக லாபம் பார்க்கு முயற்சிகளில் ஈடு பட்டிருக்கின்றது காலா படக்குழு. அதன் படி காலா திரைப்படத்திற்கான டிக்கெட் விலையை, முதல் பத்து நாட்களுக்கு மட்டும் 100 சதவீதம் வரை உயர்த்தி கொள்ள அரசிடம் அனுமதி பெற, திரையரங்குகள் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
100 சதவிகிதம் என்பது உண்மையிலேயே அநியாயம் தான். ஆனாலும் ரிலீசான முதல் 10 நாட்களுக்கு ரஜினியின் ரசிகர்கள் கூட்டம் கண்டிப்பாக திரையரங்கங்களை நிறைத்திடும். அந்த நம்பிக்கையில் தான், இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன திரையரங்கங்கள். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், காலா திரைப்படத்திற்கான டிக்கெட் அதிக விலையில் விற்பனையாகிறதே! இந்த கட்டணக் கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.