கருணாநிதிக்கே அசராத தல அஜித் அன்புச்செழியனுக்கு அஞ்சுவாரா?: வெளியில் வருமா லீ மெரீடியன் ஹோட்டல் ரகசியம்!?
சினிமா ஃபைனான்ஸியர் நல்லவரா! இல்ல கெட்டவரா! என்று கோடம்பாக்கத்தில் பரபர பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கிறது.
அன்புக்கு ஆதரவு சைடில் பாலா, சீனுராமசாமி, தேவயாணி, விஜய் ஆண்டனி போன்றோர் நிற்கிறார்கள். எதிரில் விஷால், அமீர், கருபழனியப்பன், சசிக்குமார் போன்றோர் நிற்கிறார்கள்.
அன்பு மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது தல அஜித்தை அவர் மிரட்டியதுதான். இது பழைய விவகாரம்தான் என்றாலும் அசோக்குமார் மரணத்தை தொட்டு அன்புச்செழியன் மீண்டும் சீனுக்கு வந்திருக்கும் நிலையில் தல விவகாரமும் பற்றி எரிகிறது.
அதாவது நான்கடவுள் படத்தில் ஆர்யா பண்ணிய கதாபாத்திரத்தை முதலில் அஜித்தான் புக் ஆகியிருந்தார். இதற்காக முதலில் அஜித்துக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தாராம் பாலா. ஆனால் பல காலமாக ஷூட் ஆரம்பிக்கப்படவில்லை. அஜித் வேறு படங்களில் கமிட் ஆகிவிட்டார். இந்நிலையில் அஜித்தை நடிக்க கேட்க, அவர் டேட்ஸ் இல்லை, முடியாது என்றுவிட்டார். இதனால் அவரை ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து வைத்து அறையில் அடைத்து அன்புச்செழியன் நாட்கணக்கில் மிரட்டினார் என்று புகார்.
இப்போது அசோக் விவகாரத்தோடு சேர்த்து அஜித்தின் பழைய விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்க, அன்புச்செழியனை போலீஸ் சசிக்குமாரின் புகாரின் பேரில் தேடிக் கொண்டிருக்கிறது. முன் ஜாமீனுக்கு அப்ளை செய்துவிட்டு எங்கோ மறைந்தபடி எக்ஸ்க்ளுசீவாக பேட்டி கொடுத்திருக்கும் அன்புச்செழியன் ”ரொம்ப காலமாக என்னை ஒரு விஷயத்தில் சிக்க வைத்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அது தல! அஜித்தை நான் சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் அடைத்து வைத்து மிரட்டினேன் என்று. உண்மையில் அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை. அது ஒரு கற்பனையான, பொய்யான குற்றச்சாட்டு. ஆதாரமில்லாமல் அள்ளி வீசி என்னை திட்டுகிறார்கள்.
ஒருவேளை அது உண்மை என்றால் அஜித்தே அதை சொல்லட்டுமே பார்க்கலாம்.” என்கிறார்.
எவனுக்கும் அசராதவர்தான் தல அஜித்! கடந்த தி.மு.க. ஆட்சியில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள சொல்லி வர்புறுத்தியதற்காக ‘மிரட்டுறாங்கய்யா!’ என்று முதல்வரை நோக்கி மேடையிலேறி, மைக்கை பிடித்து சவுண்டு விட்ட கெத்து பார்ட்டி. ரஜினிகாந்த் இதற்காக எழுந்து நின்று கைதட்டினார்.
ஆனானப்பட்ட கருணாநிதிக்கே அசராத அஜித் இந்த அன்புச்செழியனுக்கா அஞ்சப்போகிறார்? ஆக லீ மெரிடியன் ஹோட்டலில் அப்படியொரு சம்பவம் நடந்ததா இல்லையா என்பதை தலயே வெளியே சொல்ல வேண்டும்.