அப்பாடா...! ஒருவழியாக எஃப்ஐஆரை ஆரம்பித்த விஷ்ணு விஷால்! 6 மாதங்களுக்குப் பிறகு புதிய மாற்றங்களுடன் மீண்டும்..!
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜகஜால கில்லாடி' படம், தற்போது ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, புதுமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் படம்தான் 'எஃப்ஐஆர்'. 'ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்' என்பதின் சுருக்கம்தான் இந்த தலைப்பு.
சுஜாதா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கடந்த செம்படம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்தப் படம், ஃபைனான்ஸ் பிரச்னையில் சிக்கியதால் படப்பிடிப்பு ஆரம்பமாகமலேயே இருந்தது.
இறுதியாக, 'எஃப்ஐஆர்' படத்தை தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலமே தயாரிக்க முடிவு செய்த விஷ்ணு விஷால், படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் படக்குழுவுடன் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், இப்பணிகள் எல்லாம் முடிந்து ஒருவழியாக 'எஃப்ஐஆர்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் (நவம்பர் 25) தொடங்கியுள்ளது. வரும் 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சிக்குரிய தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், "கதை விவாதங்கள், சில காயங்கள், உடற்பயிற்சி மற்றும் என்னுள் நிறைய புதிய மாற்றங்களுடன் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில்..!" என குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/TheVishnuVishal/status/1198839362928041984
'எஃப்ஐஆர்' படத்தில், விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
அவர்களுடன் கருணாகரன், 'யூடியூப்' பிரசாந்த் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் படத்துக்கு, அஷ்வந்த் இசையமைக்கிறார். ஏற்கெனவே ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 3 ஹீரோயின்களுடன் எஃப்ஐஆரை விஷ்ணுவிஷால் தொடங்கியிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.