காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும்கூட இப்படி காயப்படுத்தலாமா? இது பெரிய மனுஷனுக்கு அழகா? டி.ஆரை. வெளுத்து வாங்கும் விஷால்...
மீரா கதிரவன் இயக்கத்தில் விதார்த், தன்ஷிகா நடிப்பில் 'விழித்திரு' வரும் அக்டோபர் 6 ஆம் தேதி படம் வெளிவரவுள்ள நிலையில், நேற்று முன்தினம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய தன்ஷிகா மேடையிலிருந்த யாருடைய பெயரையும் சொல்லாமல் படத்தை மட்டும் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார். அவரைத் அடுத்து வந்து பேசிய டி.ராஜேந்தர், "விழித்திரு படத்துக்கு பிறகுதான் கபாலி படத்தில் நடித்தார் தன்ஷிகா. சூப்பர்ஸ்டார் உடன் நடித்ததுமே நான் யாரென்று இப்ப கேட்டுகிட்டு இருக்கு. இது தான் உலகம். மேடையில் பேசும்போது கூட என் பெயரை சொல்லவில்லை.
அப்போது தன்ஷிகாவை பார்த்து நீயெல்லாம் என் பெயரை சொல்லியா நான் வாழப்போகிறேன்? ஹன்சிகாவை பற்றியே கவலைப்படாதவன் நான் இந்த தன்ஷிகாவை பற்றியா கவலைப்பட போகிறேன்" என்றார்.
இதனையடுத்து அவரிடம் தன்ஷிகா மன்னிப்புக் கேட்டும் ஏற்காத டி.ஆர். தன்ஷிகாவைப் பற்றி தொடர்ந்து விமர்சித்து பேசியதால் அவர் கண்கலங்கினார். " தயவுசெய்து உட்காருங்கள் ஒரு நீங்கள் பெரிய நடிகை. மலையோடு நடித்த பின் இந்த மடுவெல்லாம் தெரியாது. இது தான் உலகத்தோட ஸ்டைல். மேடை நாகரீகத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதை தன்ஷிகாவுக்கு ஒரு அண்ணனா நான் கற்றுத்தருகிறேன். பெரிய படங்களில் நடிக்கும் தன்ஷிகா சிறிய படங்களின் விளம்பரத்திற்கு வருவதற்கு நன்றி. என கூறினார். டி.ஆரின் இந்த அதிரடி பேச்சால் நிகழ்சசி முடியும் வரை மேடையிலேயே கண்கலங்கியபடியே அழுதுகொண்டே இருந்தார் தன்ஷிகா.
தன்ஷிகா மேடையிலேயே கதறி அழுத்த சம்பவம் காட்டு தீ போல பரவியது. இச்சம்பவம் குறித்து நடிகர் சங்க தலைவர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.
டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர்.
மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே... நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன்.
டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம்.
ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர். அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். என இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.