"திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவளிக்க முடியாது" - விஷால் அறிவிப்பு!
ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தி நாளை முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள அறிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தயாரிப்பாளர்கள் சங்கம், உடனடியாக போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் 18 சதவீத ஜிஎஸ்டி வரி, 30 சதவீத கேளிக்கை வரி என தியேட்டர் உரிமையாளர்கள் தலையில் கைவைக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாளை முதல் தியேட்டர்கள் மூடப்படும் என அதன் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.
இது குறித்து சென்னை அண்ணா சாலையில், தமிழ்நாடு திரைப்பட அனைத்து அமைப்புகளின் சார்பில் அதன் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்த போராட்ட அறிவிப்பை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது பேசிய திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால், திரைத்துறையினரிடம் இருந்து பெறும் ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றும் நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு அளித்திருக்கும் உறுதிமொழியை சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே பல காரணங்களால் திரைத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், பல படங்கள் ஓடிக்கொண்டிருக்கிற நிலையில், சில படங்கள் வெள்ளித்திரை காண உள்ள நிலையில், காட்சிகளை ரத்து செய்வதாக, திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்திருக்கும் முடிவு, மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், விஷால் கூறியிருக்கிறார்.