விஜய்சேதுபதி பட நடிகர் உடல் நலக்குறைவால் மரணம்... திரைப்பிரபலங்கள் இரங்கல்...!
உடல்நலக் குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார்.
ரேணிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா 2, நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்து காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் தீப்பெட்டி கணேசன். தன்னுடைய குள்ளமான உடல்வாகையே தனக்கு ப்ளஸாக மாற்றி, நடிப்பில் முன்னேறி வந்த தீப்பெட்டி கணேசனுக்கு நாளடைவில் பட வாய்ப்புகள் இல்லாமல் போக பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டார்.
கடந்த கொரோனா லாக்டவுனின் போது நடிகர் விஷால், பிரேம் குமார், ஸ்ரீமன், போன்ற நடிகர்கள் தன்னுடைய வீடு தேடி வந்து உதவியதாக கூறிய தீப்பெட்டி கணேசன், பால் வாங்க கூட காசு இல்லை என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டதை அடுத்து கவிஞர் சினேகன் அவருடைய வீட்டிற்கே சென்று உதவினார். நடிகர் ராகவா லாரன்ஸ் தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளுடைய பள்ளி செலவை ஏற்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் சீனு ராமசாமி, ‘எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.அன்புநிறை இதய அஞ்சலி கணேசா..’ என இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார்.