தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு இன்று (மே 30) விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

மாணவர்களுக்கு விருது வழங்கும் விஜய் 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார். விஜயின் இந்த திட்டம் மாணவ மாணவிகளிடையே கல்வி ஆர்வத்தை தூண்டி உள்ளது. விஜய் கையால் பரிசு பெற வேண்டும் என்றும், விஜய்யை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மாணவர்கள் பலர் தேர்வில் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்து வருகின்றனர்.

88 தொகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு

இந்த நிலையில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடக்கிறது. சென்னை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் திண்டுக்கல், சிவகங்கை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், தேனி, பெரம்பலூர், வேலூர் கன்னியாகுமரி உள்ளிட்ட 88 தொகுதிகளில் உள்ள 600 மாணவ மாணவிகளுக்கு இன்று (மே 30) விருது வழங்கப்பட உள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்தல் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கும், மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

மூன்று கட்டங்களாக நடக்கும் விருது வழங்கும் விழா

அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவிகள், வறுமை கோட்டிற்கு கீழே இருந்த போதிலும் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் ஆகியோருக்கும் விஜய் விருது வழங்கவுள்ளார். விழாவில் சுமார் 2000 பேர் பங்கேற்கின்றனர். இவர்களுக்கென தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அரங்கிற்குள் பேப்பர், பேனா இதர பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழா மூன்று கட்டங்களக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

முதற்கட்டமாக 600 மாணவர்கள் விழாவில் பங்கேற்பு

காலை முதலே மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் ஆர்வத்துடன் விழா நடக்கும் விடுதிக்கு வரத் தொடங்கினர். தற்போது தவெக தலைவர் விஜயும் வருகை தந்துள்ளார். முன்னதாக ஹோட்டல் முன்பு உள்ள விநாயகர் சிலைக்கு, சிறப்பு பூஜைகள் நடத்தி தேங்காய் உடைத்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வழிபாடு செய்தார். மாணவர்களை உள்ளே அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதால் விஜய் ஹோட்டலில் உள்ள அறையில் காத்திருக்கிறார். இன்னும் சில நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்கும் என விழா ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.