'ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா'... வெற்றிமாறன் - எஸ்.ஆர்.பிரபு எதிர்ப்பு!
மத்திய அரசின் ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு, தொடர்ந்து பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு, தொடர்ந்து பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதா கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்டதில் இருந்தே இந்தியா முழுக்க உள்ள பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ஜூலை 2ம் தேதி வரை புதிய சட்ட திருத்த வரைவின் மீதான கருத்துகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், உள்ளிட்ட 1400 கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர்.
நேற்று நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்,ஒளிபரப்பு சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக... அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல... சட்ட வரைவு குறித்து கருத்து தெரிவிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்று பதிவிட்டிருந்தார். இவரது இந்த கருத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் வெற்றிமாறன், இந்த ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதா காரணமாக... வருங்காலத்தில் நல்ல கருத்து சொல்லுகிற படங்களை எடுக்கவே முடியாது என தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு போட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா நாட்டின் இறையாமை காக்கவே என ஒரு கூட்டம் கம்புசுத்துகிறது. இவ்வாறான விசயம் முன்பே இருந்திருந்தால் #அருவி #ஜோக்கர் போன்ற படங்கள் வந்திருக்க வாய்ப்பேயில்லை! ஆகவேதான் நாங்கள் அதை எதிர்க்கிறோம். மற்றபடி வாழ்க பாரதம் என முழங்குவதில் எங்களுக்கும் பெருமிதமே!! என கூறியுள்ளார்.