பாட்டியின் லூட்டி... ‘தாய் கிழவி’ படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? விமர்சனம் இதோ
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், முனீஸ்காந்த், சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள தாய் கிழவி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

Thaai Kizhavi Movie Review
தமிழ் சினிமாவில் பெண் ஆளுமைகளை மையப்படுத்தி வரும் படங்கள் மிகக்குறைவு. அந்த இடைவெளியை அதிரடியாக நிரப்பியிருக்கிறது சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘தாய் கிழவி’. ராதிகா சரத்குமாரின் அசுரத்தனமான நடிப்பில் ஒரு கிராமத்து வாழ்வியலை ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருக்கிறது இப்படம்.
தாய் கிழவி பட கதை
கருமாத்தூர் கிராமத்தின் அசைக்க முடியாத அதிகாரம் பவுனுத்தாயி (ராதிகா). யாருக்கும் அஞ்சாத சுபாவம், கையில் சுருட்டு, வாயில் தெறிக்கும் அதிரடி வசனங்கள் என ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். வட்டித் தொழில் செய்யும் அவர், தன் பிள்ளைகளையே தன் நிழலில் வளரவிடாத ஒரு 'இரும்பு மனுஷி'. திடீரென ஒரு நாள் பவுனுத்தாயி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுகிறார். பேச்சு இழந்த நிலையில் அவரது ஒரு கை விரல் மட்டும் ஏதோ ஜாடை காட்டுகிறது. அந்த ஜாடையில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? இடையில் புகுந்து 160 பவுன் நகை விவகாரத்தைக் கிளப்பும் அந்நிய நபரால் குடும்பமே எப்படி தலைகீழாக மாறுகிறது? இறுதியில் பவுனுத்தாயி சொல்ல வந்த செய்தி என்ன என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
தாய் கிழவி விமர்சனம்
இந்தப் படம் முழுக்க முழுக்க ராதிகா சரத்குமார் எனும் மகா நடிகையின் தோள்களில் பயணிக்கிறது. பாம்படக் காது, உடல் சுருக்கங்கள் என ஒப்பனை மிக இயல்பாக உள்ளது. துடைப்பத்தை கையில் எடுத்தாலே ஊரே நடுங்கும் அந்தத் திமிரான உடல்மொழி அபாரம். குறிப்பாக, உடல் நலம் குன்றி படுக்கையில் இருக்கும்போது கண்கள் மூலமே அவர் காட்டும் உணர்ச்சிகள் தேசிய விருதுக்கு தகுதியானவை.
மகன்களாக வரும் அருள்தாஸ், பாலசரவணன், மற்றும் கமல் ரசிகராக வரும் சிங்கம்புலி ஆகிய மூவரும் வாழ்ந்துள்ளார்கள். குறிப்பாக சிங்கம்புலியின் 'கமல்' அலப்பறைகள் தியேட்டரில் சிரிப்பலைகளை உருவாக்குகிறது. ரேச்சல், முனீஷ்காந்த், வேட்டை முத்துக்குமார் என ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்த மண்ணின் மனிதர்களாகவே மாறியிருக்கிறார்கள்.
தாய் கிழவி ரிவ்யூ
வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவைத் தவிர்த்து, ஒரு முதிய பெண்ணை மையமாக வைத்து கதை சொன்ன இயக்குநருக்குப் பாராட்டுகள். "பெண்கள் தற்சார்புடன் வாழ வேண்டும்", "பொருத்தமற்ற வாழ்க்கையைத் துறக்க வேண்டும்" என ராதிகா பேசும் வசனங்கள் ஆழமானவை. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. விவேக் விஜயகுமாரின் கேமரா நம்மை மதுரைக்கே அழைத்துச் செல்கிறது.
பிளஸ் & மைனஸ்
ராதிகாவின் அசாத்தியமான நடிப்பு. இரண்டாம் பாதியில் சில இடங்களில் வேகம் குறைகிறது. எதார்த்தமான கிராமத்து வாழ்வியல் | நகை தேடும் படலம் சற்று நீளமாகத் தெரிகிறது. அழுத்தமான பெண் விடுதலைக் கருத்துகள்.
'தாய் கிழவி' வெறும் பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல; அதிகாரப் மமதை கொண்ட மனிதர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது எவ்வளவு கீழிறங்குவார்கள் என்பதைக் காட்டும் ஒரு கண்ணாடி. பெண்களின் சுயமரியாதையை உரக்கச் சொல்லும் இந்தப் பாட்டி, ரசிகர்களின் மனதை வெல்வாள் என்பது உறுதி.

