'மேயாத மான்' வைபவ்வுடன் செகண்ட் இன்னிங்சை தொடங்கிய பிரபல இயக்குநர்! புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
பிரபல இயக்குநர் கார்திக் சுப்பராஜின் தயாரிப்பில், வைபவ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 24) தொடங்கியுள்ளது.
'பீட்சா', ஜிகர்தாண்டா', 'இறைவி', 'மெர்குரி' என தரமான படங்களை படைத்து தமிழ் திரையுலகின் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
அதன்பின்னர், 'சூப்பர் ஸ்டார்' ரஜினியின் 'பேட்ட' படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அவர், தற்போது, தனுஷ் ஹீரோவாக நடிக்கும் 'டி-40' படத்தை இயக்கிவருகிறார். அத்துடன், படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
வைபவ் - பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான 'மேயாத மான்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த கார்த்திக் சுப்பராஜ், தனது ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் மெர்குரி படத்தை இயக்கி தயாரித்தார்.
இதனையடுத்து, 'தேசிய விருது' நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'பென்குயின்' மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தை அவரது நிறுவனம் தயாரித்து வருகிறது. இவ்விரு படங்களும், ஹீரோயின்களை மையப்படுத்திய கதைகளுடன் உருவாகிறது.
இந்த நிலையில், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 5-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்தில், வைபவ் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிறுவனத்தின் முதல் படமான மேயாத மானுக்குப் பிறகு வைபவ் நடிக்கும் 2-வது படம் இது.
இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றி அசோக் வீரப்பன் இயக்குகிறார்.
ஆக்ஷன், டிராமா, காமெடி கதையுடன் உருவாகும் இந்த படத்துக்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இன்று (நவம்பர் 24) தொடங்கியுள்ளது.
புதிய படம் குறித்த மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கார்த்திக் சுப்பராஜ், ஸ்டோன் பெஞ்ச்சின் 5-வது படமாகவும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் 30-வது படமாகவும், இயக்குநர் அசோக் வீரப்பனின் அறிமுகப்படமாகவும் உருவாகும் இந்தப் படத்துக்கு தங்கள் அனைவரின் ஆதரவும் தேவை என பதிவிட்டுள்ளார்.