தமிழ் சினிமாவில் ஃபேன்டஸி படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அத்தகையை ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக தயாராகி வெளிவரும் படங்கள், வெற்றி வாகை சூடியதும் உண்டு. 

உதாரணமாக, குழந்தைகளும், குடும்பங்களும் கொண்டாடிய அலாவுதீன், பட்டிணத்தில் பூதம் உள்ளிட்ட படங்களை சொல்லலாம். அந்த வகையில், அதுப்போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் உருவாகும் படம் 'ஆலம்பனா'.இன்றுள்ள குழந்தைகளை ஈர்க்கும் வகையிலும், இப்போதுள்ள ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரியும் இந்தப் படம் தயாராகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 'விஸ்வாசம்' படத்தை வெளியிட்டு மாபெரும் வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும், தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட ஒரு மியூசிக்கல், மேஜிக்கல் மற்றும் அற்புத கதையுடன் இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி கே.விஜய்.

 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய இவர், 'ஆலம்பனா' மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தொடர்ந்து, என்டெர்டெயின்மென்ட் கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 'என்னை அறிந்தால்' புகழ் பார்வதி நாயர் நடிக்கிறார். இதுவரை வந்த வைபவ் படங்களிலே 'ஆலம்பனா' தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. 

முனிஷ்காந்த், திண்டுக்கல் ஐ லியோனி, காளிவெங்கட், ஆனந்த்ராஜ், முரளிசர்மா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்தப்படத்துக்கு, வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்கிறார். 'ஆலம்பனா' படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது