Vadivelu : மாஸ் பிளான் போட்டு களமிறங்கும் வடிவேலு...ரீ என்ட்ரியை கவனமாக கையாளும் வைகை புயல்!!
Vadivelu : உதயநிதியுடன் நடிப்பதால் தனக்கு பாதுகாப்பு என எண்ணியே மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தை தனது ரீ என்ட்ரியாக வடிவேலு தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு சமீபத்தில் நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் பழைய உச்சாகத்தோடு வடிவேலு திரைப்படங்கள் நடிக்க தயாராகியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே வடிவேலு, இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'நாய் சேகர்' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை கூட, வடிவேலு 'நாய் சேகர்' படக்குழுவினருடன் தான் கொண்டாடி மகிழ்ந்தார். இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ள உதயநிதி ஸ்டாலினுடன் முதன்முறையாக வடிவேலு கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். வைகை புயலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. படங்களில் மட்டுமல்லாமல் மீம்ஸ்கள் மூலமாகவும் ரசிகர்களோடு இணைந்து விட்ட வடிவேலுவின் ரீ என்ட்ரி குறித்த உற்சாகம் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது.
முன்னதாக "டான்" படத்தை தொடர்ந்து அசோக் குமார் இயக்கத்தில் சிங்கப்பாதை படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இதனால் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. பலரும் வற்புறுத்தியும் இப்படத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டாராம்.
இனிமேல் படங்களில் ஹீரோவாக தான் நடிக்க விரும்புவதால் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என எண்ணிய நிலையில் உதயநிதி படத்தில் மட்டும் நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆனால் தேர்தலில் தி.மு.க கட்சி தோல்வியை தழுவியதால், மாபெரும் சிக்கலுக்குள்ளான வடிவேலு அவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.
வடிவேலு திரையுலகை விட்டு இரண்டு ஆண்டு காலம் விலகி இருந்தார். தெனாலிராமன் என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார். எஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படப் பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் இவருக்கு 2017 இல் ரெட் கார்டு போட்டது. பின்னர் தயாரிப்பு நிறுவனத்திடம் பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டுவிட்டதால் இவர் மீதான தடை 2021 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.
இவ்வாறு திமுகவுக்கும் வடிவேலுக்கு இடையே நீண்ட தொடர்பு இருப்பதால் உதயநிதியுடன் நடிப்பதால் தனக்கு பாதுகாப்பு என எண்ணியே இந்த படத்தை தனது ரீ என்ட்ரியாக வடிவேலு தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.