அகவை 82ல் நடிகர் சிவகுமார்.. போட்டோ போட்டு மனதார வாழ்த்திய உலக நாயகன் - அண்ணா என்றழைத்து நன்றி சொன்ன சூர்யா!
கோவையில் பிறந்து ஓவியக் கலைஞராக உருவெடுத்து இன்று தமிழ் சினிமாவே போற்றும் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் சிவகுமார். 1965 ஆம் ஆண்டு வெளியான "காக்கும் கரங்கள்" என்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் சுமார் 36 ஆண்டுகளாக மிகச் சிறந்த நடிகராகவும், ஒழுக்கமான மனிதராகவும் வாழ்ந்து வருபவர் தான் சிவகுமார். இன்று அக்டோபர் 27ஆம் தேதி தனது 82 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் சிவக்குமார் உண்மையில் மார்க்கண்டேயன் என்று அழைப்பதில் எந்தவித தவறும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவிற்கு துடிப்புடன் இந்த வயதிலும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள். அவர் வெளியிட்ட பதிவில் "அண்ணன் சிவகுமார், தலைமுறை தாண்டும் கலைஞர்களில் மூத்தவர்; தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்; ஓவியக் கலைஞராக இருந்து நடிகராக மலர்ந்து இன்று மாபெரும் சொற்பொழிவாளராகவும் பரிணமளிக்கிறார். சிவகுமார் அண்ணன் அவர்களை இப்பிறந்த நாளில் மகிழ்வோடு வாழ்த்துகிறேன். நீடு வாழ்க!"என்று கூறியுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.
இந்நிலையில் தந்தையின் சார்பாக நன்றி தெரிவிக்கும் வகையில் ட்வீட் ஒன்றை போட்டுள்ள பிரபல நடிகர் சூர்யா சிவகுமார் அவர்கள் "அண்ணா உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும் நன்றி" என்று கூறியுள்ளார். நடிகர் சிவகுமாரன் அவர்கள் இறுதியாக கடந்த 2001 ஆம் ஆண்டு தல அஜித் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான "பூவெல்லாம் உன் வாசம்" என்கின்ற திரைப்படத்தில் தல அஜித் அவர்களின் தந்தையாக நடித்திருந்தார்.
திரை துறையில் ஆதிக்கம் செலுத்திய நடிகர் சிவகுமார் அவர்கள் "கையளவு மனசு", "ரேவதி", "புஷ்பாஞ்சலி", "சித்தி", "அண்ணாமலை" மற்றும் "லட்சுமி" போன்ற நாடகங்களிலும் நடித்து வந்தார். குறிப்பாக திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெற்றாலும் கடந்த 2008 ஆம் ஆண்டு வரை அவர் சின்னத்திரை நாடகங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D