தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... சென்னையில் வைத்து ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த திட்டம்...!
இன்று ரஜினிகாந்த் நேரில் ஆவாரா என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் முன் ரஜினிக்கு பதிலாக அவருடைய சார்பில் வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார்.
தூத்துக்குடியில் 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் நடந்த தடியடி, துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தூத்துக்குடி விரைந்த ரஜினிகாந்த், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்தார். மேலும் செய்தியாளர் சந்திப்பின் போது சமூக விரோதிகளின் ஊடுருவலால் தான் கலவரம் நடந்ததாகவும் கருத்து தெரிவித்தார். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
24வது கட்டமாக தூத்துக்குடியில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்று முதல் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்த், அரசு மருத்துவமனை டீன், கலவரத்தின் போது காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தீயணைப்பு துறையினர் உள்பட மொத்தம் 56 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டு உள்ளது.
இதில் நேற்று மட்டும் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இன்று ரஜினிகாந்த் நேரில் ஆவாரா என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் முன் ரஜினிக்கு பதிலாக அவருடைய சார்பில் வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார். பின், வழக்கு தொடர்பான விசாரணைக்கு காணொலியில் ஆஜராக ரஜினி விரும்புவதாக தெரிவித்தார்.
வீடியோ கான்பரன்ஸ் வசதி தூத்துக்குடியில் இல்லை என்பதால், சென்னையில் உள்ள அலுவலகத்தில் ரஜினியுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என விசாரணை அதிகாரி தெரிவித்ததாக ரஜினியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.