விஜய்-ன் சர்கார் படம் பா.ஜ.க-வை விமர்சிக்க போகிறதா? சர்ச்சையை கிளப்பிய சர்கார் தலைப்பு;
தளபதி விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் திரைப்படம் சர்க்கார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக, வெகு மும்முரமாக தயாராகி வருகிறது. ”தளபதி 62” என அழைக்கப்பட்டு வந்த இந்த திரைப்படத்தின் அசல் தலைப்பு, நேற்று தான் வெளியானது. ”சர்கார்” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபஸ்ட் லுக், பல்வேறு காரணங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் ஃபஸ்ட் லுக்கில், விஜய் ஸ்டைலாக சிகரெட்டை பற்ற வைப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. இதனால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவது போல இது இருப்பதாக, ஒரு பக்கம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது சர்கார் ஃபஸ்ட் லுக்.
அதே சமயம் சர்கார் என்பது ஒரு ஹிந்தி வார்த்தை. இதனை பாஜக அரசு தேர்தலின் போது “ ஆப் கி பார் மோடி சர்கார்” எனும் கோஷத்தில் பயன்படுத்தி இருந்தது. ஏற்கனவே இந்த திரைப்படத்தில், அரசியல் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இடம் பெற்றிருப்பதாகவும், சில தகவல்களை ஏ.ஆர்.முருகதாஸே கூறி இருந்தார்.
இதனை தொடர்ந்து இந்த முறை, பாஜக-வின் கோஷத்தில் இருந்தே தலைப்பு எடுக்கப்பட்டிருப்பதை பார்க்கும் போது, சர்கார் திரைப்படம் பாஜக அரசை விமர்சிக்க போகிறதா? எனும் கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் இப்போது எழுந்திருக்கிறது.
ஏற்கனவே மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி பற்றிய வசனங்கள் இடம் பெற்றதால், ரிலீசின் போது பல தடங்கல்கள் ஏற்பட்டது. பாஜக-வும் பல இடையூறுகளை மெர்சலுக்கு கொடுத்தது. அவர்களின் திட்டத்தை விமர்சித்ததற்கே இவ்வளவு செய்தவர்கள், அவர்கள் ஆட்சியையே விமர்சித்தால் என்ன ஆகப்போகிறதோ? என இப்போதே ”சர்கார்” படம் குறித்து விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்திருக்கிறது.
இதை எல்லாம் தாண்டி, கத்தி படம் மூலம் விவசாயிகளுக்காக பேசியது போல, முக்கிய கருத்து இந்த படத்திலும் இருக்கும் அது என்ன? எனும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது இந்த ”சர்கார்” தலைப்பு.