அரசியல் சட்டத்தின் பக்கங்கள் கிழிகின்றன.. இந்தியா சீரழிவதை தடுக்க முடியாமல் போகும்.. கொந்தளிக்கும் ராஜ்கிரண்!
வட நாட்டு போலிச்சாமியார்களான "தேசத்துரோகிகள்", மிகக்கடுமையான நடவடிக்கைகள் மூலம் தண்டிக்கப்படாவிட்டால், இந்தியா சீரழிவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும்.
நம் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றாக கிழிக்கப்பட்டு வருகின்றன என்று நடிகர் ராஜ் கிரண் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் அண்மையில் நடைபெற்ற இந்து சாமியார்கள் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதால் சர்ச்சை எழுந்தது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், சாதாராண பிரிவுகளின் கீழ் அவர்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் இந்தச் சர்ச்சை பேச்சுகள் பேசு பொருளாகியிருக்கின்றன. இந்நிலையில் இந்தச் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக நடிகர் ராஜ் கிரண் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
அதில், “நம் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றாக கிழிக்கப்பட்டு வருகின்றன.. .தங்களது மிகக்கேவலமான பேச்சுக்கள் மற்றும் செய்கைகள் மூலமாக, தேசத்தின் அமைதியைக் குலைத்து, அதன் மூலம் வளர்ச்சியைத் தடுத்து, இந்தியா வல்லரசாவதை தடுக்க நினைக்கும். அமெரிக்க பாசிஸத்துக்கு விலை போகும், வட நாட்டு போலிச்சாமியார்களான "தேசத்துரோகிகள்", மிகக்கடுமையான நடவடிக்கைகள் மூலம் தண்டிக்கப்படாவிட்டால், இந்தியா சீரழிவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும். மத்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டிய, மிக முக்கியமான காலகட்டமிது.” என்று நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.