துப்பாக்கி சுடுதல் போட்டி! அடுத்த கட்டத்திற்கு தேர்வான தல அஜித்! குவியும் வாழ்த்து!
தல அஜித், நடிப்பதையும் தாண்டி பல்வேறு விளையாட்டு துறையிலும் கவனம் செலுத்தி வருபவர். அந்த வகையில், கடந்த சில மாதங்களாக இவர் துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுத்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அளவிலான 45-வது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, அடுத்த கட்டத்திற்கு தேர்வாகியுள்ளதை நடிகர் ஆர்.கே.சுரேஷ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அசத்தும் அஜித்
தல அஜித் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல், அறிமுகமாகி பல்வேறு தடைகளை தாண்டி, முன்னணி நடிகராக உயர்ந்தவர். இதன் காரணமாகவே இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
அஜித்தின் ஆர்வம்:
திரையுலகிலும், ரசிகர்களிடமும் சிறந்த நடிகர், நல்ல மனிதர் என பெயர் எடுத்துள்ள இவர், விளையாட்டு துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
தல கால் பதித்த துறைகள்:
அஜித் திரையுலகில் அறிமுகமான காலத்தில் இருந்ததே, பைக் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதை தொடர்ந்து கார் ரேஸ், போட்டோ கிராபி, ஏரோ மாடலிங், போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இதையும் தாண்டி சமீப காலமாக, 'துப்பாக்கி' சுடுதலில் ஆர்வம் காட்டி வந்தார்.
துப்பாக்கி சுடுதல் போட்டி:
இந்நிலையில், கோயம்பத்தூரில் நடைபெற்று வரும் தமிழ்நாடு அளவிலான 45-வது துப்பாக்கிச் சூடு போட்டியில் அஜித் பங்கேற்றார். முதல் சுற்றில் அஜித் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்ட போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக, பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரசிகர்கள் இந்த செய்தியை வைரலாக ஆக்கி வருவதோடு, தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.