“நீங்கள் வாழ எங்களுடைய உதவி தேவை”... ஓடிடி ரிலீசுக்கு எதிராக டி.ராஜேந்தர் காட்டம்...!
தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் சந்திப்பு Zoom மூலமாக நேற்று நடந்தது.அதன் பின்னர் அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது.
கோலிவுட் திரையுலகம் கொரோனாவின் கையில் சிக்கி படாதபாடு பட்டு வருகிறது. இந்நிலையில் திரையுலகம் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்படாததால், புதிய படங்களை ஓடிடி-யில் ரிலீஸ் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் சந்திப்பு Zoom மூலமாக நேற்று நடந்தது.அதன் பின்னர் அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள்:
ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஒரு படத்தை உருவாக்கினால் தான் ஒரு விநியோகஸ்தரால் அந்த படத்தை வாங்க முடியும். திரையரங்க உரிமையாளரின் ஆதரவு இருந்தால்தான் அந்த படத்தினை விநியோகஸ்தரால் வெளியிடமுடியும். முதலில் படகு வேண்டும். அந்த படகை ஓட்டுவதற்கு துடுப்புள்ள படகோட்டி வேண்டும். படகு பயணிப்பதற்கு தண்ணீர் வேண்டும். இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது. இதை போலத்தான் நமது திரைப்பட தொழிலும் ஒருவரோடு ஒருவர் சார்ந்தது.
ஒரு தயாரிப்பாளரின் திரைப்படத்தை ஒரு விநியோகஸ்தர் நேரடியாக வாங்கி வெளியிட வேண்டியது என்றாலும், இல்லை ஒரு தயாரிப்பாளர் வெளியிடுவதற்கு உதவிகரமாக ஒரு விநியோகஸ்தர் இருப்பது என்றாலும் சரி, திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவு தேவை. திரையுலகம் வாழ, திரையரங்குகள் வாழ, திரைப்பட விநியோகஸ்தகள் வாழ, முதலில் பக்க பலமாக, உறுதுணையாக விநியோகஸ்தர்களாகிய நாங்கள் இருக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகரின் படத்தை ஒரு விநியோகஸ்தர் வாங்கும் போது அதிர்ஷ்டவசமாக வெற்றி அடைந்துவிட்டால் பரவாயில்லை, ஒருவேளை துரதிஷ்டவசமாக தோல்வி அடைந்துவிட்டால் அந்த தோல்வியை தோளிலே தூக்கி சுமந்தவர்கள் எண்ணற்ற விநியோகஸ்தர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
இன்றைக்கு வந்திருக்கலாம் O.T.T. தளம், ஆனால் இத்தனை காலமாக பல நட்சத்திர நடிகர்களுக்கு படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மட்டுமே சேர்த்தோம் பலம். ஏற்கனவே திரையுலகம் நலிவடைந்து, சிதைந்துவிட்டது. பத்தும் பத்தாததற்கு கொரோனா காலத்திலே திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கிறது. திரையுலகம் மூச்சுமுட்டி கிடக்கின்றது. O.T.T. தளத்திலே நட்சத்திர அந்தஸ்த்துள்ள படத்தை வாங்குவார்கள், சிபாரிசு செய்பவர்களின் படங்களை வாங்குவார்கள், ஆனால் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா?
தயாரிப்பாளர்களே சிந்திக்க வேண்டும், ஆனால் சின்ன படங்களை வாங்கி வெளியிடும் சில விநியோகஸ்தர்களும் இருக்கிறார்கள் என்பதனை மறந்துவிட வேண்டாம். இந்த O.T.T. என்ற இந்த புதிய தளம் எங்களுடைய திரைப்பட விநியோகஸ்தர் என்ற இனத்தையே அழித்துவிட கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்க விரும்புகின்றோம்.
இன்று வேண்டுமானால் கொரோனாவின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கலாம். கடவுள் அருளால், காலம் நினைத்தால் விரைவிலேயே திரையரங்குகள் திறக்கப்படும். நம்பிக்கை இருந்தால் நல்லதே நடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் செலுத்தும் 8 சதவீத கேளிக்கையை வரியை ரத்து செய்யவும், இனிவரும் காலங்களில் O.T.T.யில் படத்தைத் திரையிடும் தயாரிப்பாளர்களிடமிருந்து விநியோகஸ்தர்கள் செலுத்திய பணத்தைத் திரும்ப பெற்று சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு அளிப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.