நடிகர் சூர்யாவின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த சுலோச்சனா என்பவர், ரூ.42 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன் பின்னணியை பார்க்கலாம்.

Suriya staff cheated : நடிகர் சூர்யாவின் பாதுகாவலர் ஆண்டனி ஜார்ஜ் பிரபு ரூ.42 லட்சம் மோசடிக்கு ஆளாகியுள்ளார். சூர்யாவின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த சுலோச்சனா மற்றும் அவரது குடும்பத்தினர்தான் இந்த மோசடியை செய்துள்ளனர். கவர்ச்சிகரமான லாபம் தருவதாகக் கூறி பணம் முதலீடு செய்ய வைத்துள்ளனர். முதலீட்டுத் திட்டத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த, முதலில் அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பெற்று, லாபமாக 30 கிராம் தங்கம் கொடுத்ததாக காவல்துறை கூறுகிறது.

சூர்யா வீட்டு பணிப்பெண் செய்த மோசடி

நம்பிக்கையை பெற்ற சுலோச்சனா மற்றும் அவரது குழுவினர், ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் சுமார் ரூ.45 லட்சத்தை பரிமாற்றம் செய்ய வைத்துள்ளனர். அதன் லாபத்தை மார்ச் மாதம் தருவதாக கூறியிருந்தனர். ஏற்கனவே நம்பிக்கை பெற்றதால், இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்யும்போது சூர்யாவின் பாதுகாவலருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை என காவல்துறை கூறுகிறது. பணம் தருவதாகக் கூறிய மார்ச் மாதம் வந்தபோதுதான், தான் பெரிய மோசடிக்கு ஆளானதை அவர் உணர்ந்துள்ளார்.

பணத்தை திருப்பிக் கேட்டபோது, பல காரணங்களைக் கூறி சுலோச்சனாவும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகினர். அதன் பிறகே, ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதுகாவலர் ஜூலை மாதம் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த முதலீட்டு மோசடியில் பாதுகாவலர் மட்டுமல்ல, பலரும் சிக்கியிருப்பதை காவல்துறை கண்டறிந்துள்ளது. இந்த கும்பல் சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது. பின்னர், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, சுலோச்சனா மற்றும் அவரது கூட்டாளிகளான பாலாஜி, பாஸ்கர், விஜயலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மோசடி விவகாரம் தெரியவந்ததும், சுலோச்சனாவை சூர்யா வேலையில் இருந்து நீக்கிவிட்டார். சூர்யாவின் வீட்டில் பணிசெய்த பெண் இப்படி ஒரு மோசடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ரெட்ரோ' என்ற படம்தான் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம். ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் 'கருப்பு' படம் அடுத்து வெளியாக உள்ளது. வெங்கட் அட்லூரி இயக்கும் சூர்யாவின் 46வது படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.