தொடங்கியது நடிகர் சங்க தேர்தல் !! மயிலாப்பூர் பள்ளியில் நடைபெறுகிறது !!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் மயிலாப்பூரில் இன்று நடைபெறுகிறது. இது ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
ஆனால் வாக்காளர் பட்டியல் முறையாக இல்லை தென் சென்னை மாவட்ட பதிவாளர் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். ஆனால் இதனை எதிர்த்து விஷால் அணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இதையடுத்து பதிவாளரின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து நடிகர் சங்கத்தேர்தல் ஏற்கனவே அறிவித்தப்படி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தம் 3,644 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்களில் 3,171 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.
நடிகர் ரஜினிகாந்த் மும்பை படப்பிடிப்பில் இருப்பதால் தன்னால் வாக்களிக்க முடியாது என நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இன்று நடைபெற்று வரும் தேர்தலில் நடிகர்கள் உற்சாகத்துடன் வாக்களித்தாலும் வாக்குப் பதிவு மந்தமாகவே இருப்பதாக தெரிகிறது.