சிவகார்த்திகேயன் (sivakarthikeyan) எழுதிய பாடல்கள் வைரல் ஹிட்டான நிலையில், தற்போது சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’, விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களுக்கும் அவர் பாடல் எழுதி உள்ளார்.
சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தொடங்கி, பின்னர் தொகுப்பாளராக உயர்ந்து, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன் (sivakarthikeyan). இவர் நடிப்பதோடு மட்டுமின்றி எஸ்.கே.புரடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். இதுதவிர பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார்.

குறிப்பாக இவர் எழுதும் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே கோலமாவு கோகிலா, கனா, டாக்டர் போன்ற படங்களுக்காக சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் வைரல் ஹிட்டான நிலையில், தற்போது சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’, விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ (Beast) ஆகிய படங்களுக்கும் அவர் பாடல் எழுதி உள்ளார்.
பீஸ்ட் படத்துக்காக இவர் எழுதியுள்ள அரபிக் குத்து (Arabic Kuthu) என்கிற பாடல் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று ரிலீசாக உள்ளது. இவ்வாறு பாடல் எழுதுவதற்கும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம். அவ்வாறு பாடல் எழுதுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை அவர் கவிஞர் நா.முத்துக்குமாரின் குடும்பத்துக்கு கொடுத்து விடுவாராம்.

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கவிஞர் நா.முத்துக்குமார் (Na Muthukumar) கடந்த 2016-ம் ஆண்டு உயிரிழந்தார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் படிப்பு செலவுக்கு உதவவே நடிகர் சிவகார்த்திகேயன், இவ்வாறு செய்து செய்து வருவதாக கூறப்படுகிறது. இதை அறிந்த நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
