விஜய், தனுஷ் போன்ற முன்னணி தமிழ் நடிகர்கள் டோலிவுட் படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயனும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘டாக்டர்’ படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இவர் கைவசம் டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. இதில் டான் மற்றும் அயலான் படங்களின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக சிங்கப்பாதை படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இதுதவிர தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை அனுதீப் இயக்க உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘ஜாதி ரத்னலு’ என்கிற படத்தை இயக்கியவர் ஆவார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுவாகும். சமீபத்தில் விஜய், தனுஷ் போன்ற முன்னணி தமிழ் நடிகர்கள் டோலிவுட் படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயனும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வெளிநாட்டு நடிகையை படக்குழு தேடி வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் படத்தின் கதைப்படி இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்ணை நாயகன் காதலித்து கரம்பிடிப்பதே மையக்கருவாம்.

அதனால் எமி ஜாக்சன் மாதிரியான வெளிநாட்டு நடிகையை படக்குழு தேடி வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய தகவல்படி பார்த்தால் விரைவில் ஹாலிவுட் நடிகையுடன் சிவகார்த்திகேயன் டூயட் பாட உள்ளார் போல இருக்கிறது.
