‘யாரோ எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்’...பிரபல பாடகர் உதித் நாராயண் அலறல்...
கடந்த ஒரு மாதமாக தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக, நான்கு முறை தேசிய விருதுபெற்ற பிரபல பாடகர் உதித் நாராயண் மும்பை போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக, நான்கு முறை தேசிய விருதுபெற்ற பிரபல பாடகர் உதித் நாராயண் மும்பை போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
பீகாரை சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயண். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். ஷங்கர் இயக்கிய ’காதலன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் உதித் நாராயண். தொடர்ந்து ரஜினியின் முத்து, சிவாஜி, கமலின் காதலா காதலா, அன்பே சிவம், விஜய்யின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, மதுர, ஷாஜஹான், பகவதி, திருமலை, கில்லி, சிவகாசி, குருவி, தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். ரன் படத்தில் அவர் பாடிய காதல் பிசாசே பாடல் மிகவும் பிரபலமானது.
கடந்த ஒரு மாதமாகவே அவருக்கு ஒரு அனாமதேய எண்ணிலிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தவண்ணம் உள்ளது. உதித் நாராயண் இது குறித்து மும்பை அம்போலி பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் மனுவில்,‘ஏதோ தெரியாத புதிய எண்ணில் இருந்து யாரோ ஒரு மாதமாக மிரட்டல் விடுக்கிறார். அது யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விசாரணையில் திருட்டு போன ஒரு செல்போனில் இருந்து உதித் நாராயணுக்கு மிரட்டல் கால்கள் வந்தது தெரிய வந்தது.அந்த செல்போன் எண் உதித் நாராயணின் பாதுகாவலரின் பெயரில் இருந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது ஒரு மாதத்திற்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் தன் செல்போன் திருடு போனதாக கூறினார்.மிரட்டல் அழைப்புகளை அடுத்து உதித் நாராயண் வீடு இருக்கும் பகுதியை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். சிறந்த பாடகருக்காக 50க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள உதித் நாராயண் 4 முறை தேசிய விருதுகளையும் 5 முறை ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.