விஜய்சேதுபதியின் ஹிட் படம்.. "கண்டிப்பா நான் பார்க்கமாட்டேன்" - சின்மயி ட்வீட் வைரல் - யார் மேல்.. என்ன கோவம்?
Singer Chinmayi : பிரபல நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான ஒரு படத்தை, தான் பார்க்கப்போவதில்லை என்று கூறி பரபரப்பு ட்வீட் ஒன்றை சில தினங்களுக்கு முன்பு போட்டுள்ளார் சின்மயி.
![Singer Chinmayi says she wont watch vijaysethupathi maharaja movie because of vairamuthu ans Singer Chinmayi says she wont watch vijaysethupathi maharaja movie because of vairamuthu ans](https://static-ai.asianetnews.com/images/01j1ftk8qbc029nrbarr7bppxx/vijaysethupathi_363x203xt.jpg)
மும்பையில் பிறந்து, தென்னிந்திய மொழிகள் பலவற்றில் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி புகழ்பெற்ற பாடகி தான் சின்மயி, இவர் ஒரு சிறந்த நடன கலைஞரும் ஆவார். கடந்த 2006ம் ஆண்டு வெளியான சூர்யாவின் "சில்லுனு ஒரு காதல்" திரைப்படத்தில் நடித்த நடிகை பூமிகாவிற்கு, டப்பிங் பேசியதும் இவர் தான்.
அன்று தொடங்கி இன்று வரை பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில், நாயகிகளுக்கு இவர் டப்பிங் பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2002ம் ஆண்டு, பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியான மாதவனின் "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படத்தில் வரும் ஒரு பாடலின் மூலம் பாடகியாக திரையுலகத்திற்கு அறிமுகமானார் சின்மயி.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக திகழ்ந்து வந்த சின்மயி இந்திய திரை உலகத்தையே உலுக்கிய "மீ டூ" முன்னெடுப்பில் கலந்து கொண்டு பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன் வைத்தது அனைவரும் அறிந்ததே.
ஆனால் அதன் பிறகு தமிழ் திரையுலக டப்பிங் யூனியனிலிருந்து அவர் நீக்கப்பட்டதும், அதற்கு காரணமாக அவர் டப்பிங் யூனியனுக்கான கட்டணத்தை கட்டவில்லை என்று கூறப்பட்டதும் நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான "மகாராஜா" திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் மனம் திறந்துள்ளார்.
அவர் வெளியிட்ட அந்த பதிவில் "எனக்கு இப்பொழுதுதான் மகாராஜா திரைப்படத்தில் வரும் பாடல்களுக்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியிருக்கிறார் என்று தெரியவந்தது. அது பாலியல் துன்புறுத்தலை எதிர்க்கும் ஒரு திரைப்படம் என்பதை நான் அறிவேன். அவர் அந்த படத்திற்கு பாடல்களை எழுதியிருப்பதாலேயே நான் அந்த திரைப்படத்தை பார்க்க போவதில்லை".
"இந்த உலகத்திலேயே கோலிவுட் உலகத்தில் மட்டும் தான், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரை அடையாளம் காட்டியதற்காக அந்த துறையிலிருந்து நீக்கப்படும் விஷயங்கள் எல்லாம் நடக்கிறது" என்று அவர் ஆதங்கமாக அந்த பதிவில் கூறியிருக்கிறார்.